மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட்.. இந்த ஆண்டு நீட் பயிற்சி நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
சென்னை: கடந்த ஆட்சியில் இரண்டு லட்சம் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் டேப்லெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்தாண்டு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியிலிருந்து திரும்பியவுடன் முடிவெடுக்கப்படும் என்றார்.
திருச்சியைச் சேர்ந்த கிராமாலயா என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கிவ் 2 ஏசியா ஆகியவை இணைந்து கொரோனா மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
+2 மதிப்பெண் எப்படி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், +2 மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் முடிவெடுக்கப்படும் என்றார்
இரண்டு லட்சம் லேப்டாப்கள்
மேலும், கடந்த ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அன்பில் மகேஷ், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல அந்த மாணவர்களுக்கும் சேர்த்து டேப்லெட்கள் வழங்கப்படும் என்றும் இது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
பள்ளி திறப்பு எப்போது
அடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் 10 மற்றும் +2 வகுப்புத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வந்ததாகவும் அப்படிக் காட்டும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் பயிற்சி மையம்
அதைத் தொடர்ந்து மதுரைக்கு சென்ற அன்பில் மகேஷ், கலைஞர் நினைவு நூலகத்திற்கு இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தாண்டு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியிலிருந்து திரும்பியவுடன் சட்டசபையில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை என்றும் அது வந்த பின்னர் மாணவர்களுக்கு ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.