ஆக, 2 பக்கமும் துண்டை போட்ட திமுக.. ஒரே நேரத்தில் மாறி மாறி பேச்சு.. பரபரக்கும் தேர்தல் களம்
பாமகவுடன் கூட்டணி வைக்க திமுக முயன்று வருவதாக சொல்லப்படுகிறது
சென்னை: கடந்த தேர்தலை போலவே, இந்த முறையும் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, அரசியல் களமே சற்று சலசலப்புடன் காணப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பெரும்பாலான தமிழக கட்சிகள் அடுத்தடுத்த வியூகங்களில் இறங்கிவிட்டனர்.. இதில் அதிமுக தரப்பு தங்கள் கூட்டணி பற்றி வெளிப்படையாக சொல்லவில்லை.
234 தொகுதிகளிலும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் அளித்த பேட்டிக்கு இதுவரை எந்த மறுப்பும் தலைமை சொல்லவில்லை. மறைமுக அழுத்தம் விடுத்துவந்ததால், தமிழக பாஜகவை ஆஃப் செய்ய இவ்வாறு பேட்டி தந்தார் என்று பரவலாக சொல்லப்பட்டாலும், பாமகவுக்கும் அமைச்சரின் இந்த பேட்டி முற்றிலும் பொருந்தக்கூடியதே!
முந்தைய தேர்தலில் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க திமுகதான் முதலில் முயன்றது.. ஆனால், ஒருசில விஷயங்களில் ஒத்துவராமல் போனதால், அதற்குள் அதிமுக முந்தி கொண்டு வந்து பாமகவை தங்கள் பக்கம் இழுத்து கொண்டு போய்விட்டதுடன், சீட்டுகளை அலேக்காக அள்ளி தந்து அழகும் பார்த்தது.. ஆனால், இந்த முறை பாமகவும் வாயை திறக்கவில்லை.. அதிமுகவும் வாய் திறக்கவில்லை... இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
ஆனால், இந்த முறை பாமகவை விட்டுவிடக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்குள் இழுக்க முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.. யார் நிறைய சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்பதுதான் ராமதாஸின் வழக்கமான பழக்கம் என்பதால், நிச்சயம் அந்த முயற்சியில்தான் இந்த முறையும் ஈடுபடக்கூடும். எப்படியும் திமுகவால் தனித்து போட்டியிட முடியாது.. எனவே, 150 முதல் 200 சீட் என பெரும்பாலான இடங்களை வைத்து கொண்டு, மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு பிரித்து தரலாம் என்ற ஐடியாவில் உள்ளது.
அதுமட்டுமல்ல, காங்கிரசுக்கு தரும் சீட்டை பாமகவுக்கு தரலாமே என்றும் திமுகவுக்கு ஐடியாக்கள் தரப்பட்டு வருகிறதாம்.. காங்கிரஸ், பாமகவே இப்படி என்றால், விசிக, மதிமுக நிலைமை தெரியவில்லை. அவர்களுக்கு சின்னம் ஒரு பிரச்சனையாக உள்ளது.. தனிச்சின்னம் என்று வைகோ சொல்லி வருகிறார்.. இதற்கு சீட்டுகளை அதிகமாக கேட்கும் யுக்தி என்று மேலோட்டமாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் மதிமுக என்ற கட்சியின் அங்கீகாரத்தையும், தனித்துவத்தையும் தக்க வைக்க வேண்டும் என்ற நிலை வைகோவுக்கு ஏற்பட்டுள்ளதும் இதற்கு காரணம். இதே சிக்கல்தான் விசிகவுக்கும்.
ஒருவேளை இவர்களுக்கு கூடுதல் சீட் கிடைக்காவிட்டால், அல்லது உதயசூரியன் சின்னம் என்று மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டால், வெளியில் இருந்து ஆதரவு தரும் நடவடிக்கையில் இறங்குவார்களா என தெரியவில்லை.. ஏனென்றால், இப்போதைக்கு இவர்களின் எம்பிக்கள் திமுகவில்தான் உள்ளனர்..அதனால் வேறு கட்சிக்கும் போக முடியாத நிலை உள்ளது.
ஆனால், இந்த சிக்கல் காங்கிரசுக்கு இல்லை.. அது ஒரு தேசிய கட்சி என்பதால், சொந்த கட்சி சின்னத்தில்தான் போட்டியிட முடியும்.. எனவே, 30 சீட்களை காங்கிரசுக்கு ஒதுக்கினால் போதும் என்ற ரீதியில்தான் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
ஆக, ஒரே நேரத்தில் காங்கிரஸ், பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கி உள்ளதாக தெரிகிறது.. ஆனால், இந்த குற்றச்சாட்டை சில திமுக நிர்வாகிகள் மறுக்கின்றனர்.. யார் யாருடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறார்கள் என்று நேரில் யார் பார்த்தது? இதெல்லாம் கட்டுக்கதை.. கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாகவே உள்ளோம்.. வேண்டுமென்றே கூட்டணியில் பிளவை ஏற்படுத்த சிலர் முயல்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்கள்!