தேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டதில் நியாயமே இல்லை. மறுவாக்குப்பதிவு கோரியதற்காக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்குமா என பாமக நிறுவனர் ராமதாஸ் வினவியுள்ளார்.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த முறை பதிவான அதே அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு வாக்காளர்களுக்கு நன்றி என ராமதாஸ் கூறியுள்ளார் மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்
அதில் தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் எந்த காரணத்திற்காக மறுவாக்குப்பதிவு கோரப்பட்டது?, அந்தக் காரணத்திற்கு மறுதேர்தலில் பதிவான வாக்குகள் நியாயம் சேர்த்துள்ளனவா? என்று வினாக்களை எழுப்பினால், இல்லை என்பது ஒன்றே பதிலாகும். மேற்கண்ட 8 வாக்குச்சாவடிகளை பாட்டாளி மக்கள் கட்சியினர் கைப்பற்றி, அதிக வாக்குகளை பதிவு செய்தனர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி தான், மறுவாக்குப்பதிவு நடத்த திமுக தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்தது.
தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம்! ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா!
திமுகவின் புகார் உண்மை என்றால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட இடங்களில் கணிசமான அளவில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. தருமபுரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 8 வாக்குச்சாவடிகளில் கடந்த 18.04.2019 அன்று நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 6059 வாக்குகளில் 5447 வாக்குகள், அதாவது 89.90% வாக்குகள் பதிவாகியிருந்தன.
நேற்று நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் 5433, அதாவது 89.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 14 வாக்குகள் மட்டுமே குறைவாக பதிவாகியுள்ளன. விழுக்காடு கணக்கில் பார்த்தால் கால் விழுக்காட்டுக்கும் குறைவாக 0.23% மட்டுமே வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதும், இப்போது வாக்களித்ததைப் போலவே கடந்த மாதம் நடந்த தேர்தலிலும் மக்கள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாக்களித்தனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எந்தத் தவறும் நடக்காத நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் தேவையின்றி மறுவாக்குப்பதிவு நடத்த வைத்ததன் மக்களின் நேரமும், வரிப்பணமும் வீணாகி உள்ளது. தேர்தலுக்காக அதிகாரிகள், மத்திய துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு அவர்களின் மனிதசக்தியும் வீணடிக்கப்பட்டுள்ளது. மறு தேர்தல் காரணமாக கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்களை வேலைக்கு செல்ல விடாமல், அவர்களின் வயிற்றில் அடித்த பாவத்தை திமுக செய்துள்ளது.
இதற்கு காரணமான திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். தேவையின்றி, மறுவாக்குப்பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற திமுகவும், அதன் தலைமையும் தருமபுரி தொகுதி மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.