ரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..!
சென்னை: தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் மட்டன், சிக்கன் விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பெருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. அதில் பிரதான இடத்தை பிடித்திருப்பது பிரியாணி. பிரியாணி இல்லாமல் ரம்ஜான் இல்லை என்று கூட சொல்லலாம். அந்தளவிற்கு ரம்ஜான் கொண்டாட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழ்கிறது பிரியாணி.
இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை முடித்ததும் பிரியாணி தயார் செய்து அதனை மாற்று மத சகோதர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிமாறி தங்களது அன்பை வெளிப்படுத்துவர். இதேபோல் உணவகங்களிலும் ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி தயார் செய்யப்பட்டு படுஜோராக விற்பனை செய்யப்படும்.
சமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்
இப்படி பிரியாணி தயாரிக்க மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகள் இன்றியமையாத ஒன்று. இதனால் அதன் தேவைகள் இன்றும், நாளையும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. ஊரகப்பகுதிகளில் ரூ.600 க்கு விற்கப்படும் ஆட்டுக்கறி ரூ.700 வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.800-க்கு விற்கப்பட்ட ஆட்டுக்கறி ரூ.1000 வரை விலை அதிகரித்துள்ளது.
மட்டன் விலைக்கு சற்றும் குறையாமல் கோழிக்கறி விலையும் உயர்ந்துள்ளது. ரூ.140 முதல் ரூ.160 வரை விற்ற கோழிக்கறி ரம்ஜான் பண்டிகை எதிரொலியாக ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் விலை உயர்வை பற்றி பொருட்படுத்தாமல் இறைச்சிக்கடைகளில் கூட்டம் அலைமோதிய வண்ணம் தான் உள்ளது.