டி.என். சேஷனாக தேர்தல் ஆணையம் அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் இது.. மக்கள் எதிர்பார்ப்பு
புடம் போட்ட தங்கமாக ஆணையம் மாற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Recommended Video
சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாகவே கவனித்து வருகிறார்கள்... ஆனால் மெச்சிக் கொள்ளும் விதத்தில் அவை இல்லை என்பதே அனைவரின் வருத்தமாக உள்ளது.
முதலில் தலை தூக்கியது பறக்கும் படையினரின் செயல்பாடுகள்தான். ரோட்டில் செல்லும் வாகனங்களை சோதனையிடுவதில் கூட பாரபட்சம் என்பதுதான் முதல் குறையாக எழுந்தது. ஆளும் தரப்புக்கு ஆதரவான வண்டிகளை சோதனையிடுவதில்லை என்றும் கண்ணெதிரே நடக்கும் பணப் பட்டுவாடாக்களை தடுத்து நிறுத்துவதில்லை என்றும் பொதுமக்கள் வெளிப்படையாக குமுறிய உண்மை!
இதில் சாமான்ய மக்களால் கொண்டு செல்லப்படும் பணங்களையும் பிடுங்கி கொள்வது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இதில் அமமுக, திமுக, விசிக கட்சிகளின் நிர்வாகிகள் மீது பறக்கும் படை தனது அதிகாரத்தை செலுத்தி உள்ளது.
அநீதி, அநியாயம்
இதைவிட மோசம் நாம் தமிழர் கட்சி நிலைமை. அந்த கட்சியின் சின்னமே மறைக்கப்பட்டுவிட்டது. வாக்கு எந்திரத்தில் அது மங்கலாக்கப்பட்டுள்ளது! கண்ணுக்கே தெரியாத வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய அநீதி, அநியாயம் என்று பொங்கினார் சீமான். ஆணையத்திடம் பிரச்சனையை கொண்டுபோனார். சின்னம் தொடர்பாக எல்லாம் முடிந்துவிட்டது என ஆணையம் கைவிரிக்க, ஹைகோர்ட்டுக்கு சென்றார். அங்கு விசாரணை கூட இல்லை.. எடுத்தவுடனேயே மனு தள்ளுபடி ஆனது. உடனே சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, அவசர வழக்காக எடுக்க சொன்னார். ஆனால் அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுத்து விட்டது.
ரெய்டுகள்
இது எல்லாம் தற்செயலானதா என்று தெரியவில்லை. எல்லா சின்னமும் பளிச்சென தெரியும்போது ஒரு சின்னம் மட்டும் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மெல்லிசாக இருப்பது வித்தியாசமானது என்பதில் சந்தேகம் இல்லை. இதேபோலதான் வேட்பாளர்களின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டும். கனிமொழி ஆகட்டும், கதிர் ஆனந்த் ஆகட்டும்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடமாகட்டும்... அது ஏன் எதிர்கட்சிகளை குறிவைத்தே ரெய்டு நடத்தப்பட்டது? என்ற கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.
கர்நாடகம்
இங்கு மட்டுமில்லை.. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எங்கேயுமே இப்படி ஒரு ரெய்டு இத்தனை நாள் நடத்தப்படவில்லை என்ற விஷயம் எங்கேயோ இடிக்கிறது. கர்நாடகத்திலும் கூட மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் முகாம்களில்தான் ரெய்டுகள் நடந்ததே தவிர பாஜக பக்கம் யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. தமிழகத்திலும் கூட அதிமுகவேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் யார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்படவில்லை.
மிரட்டல்
இது தமிழகத்தில் மட்டுமில்லை.. சாதி, மதரீதியாக, வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யும், உபி முதல்வர் யோகி, முஸ்லீம்களை மிரட்டி வாக்கு கேட்ட மேனகா காந்தி போன்றோர் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக ஆணையத்திடம் இருந்து முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை
வாய்ப்பில்லை
இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் உரிமை நமக்கு இல்லை என்றாலும், அதன் குறைபாடுகள் இப்படி நம் கண்களுக்கு வெளிச்சமாக தெரிகிறது. 1990 முதல் 96 வரை டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, மத்திய அரசு அவரை பார்த்து அப்படி நடுங்கியது என்பது இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.
மாற வேண்டும்
ஆணையத்தின் கண்ணியம், இறையாண்மை குறையாமல் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சேஷன். அவர் இருந்தபோதுதான் பல சீர்திருத்தங்களை அவர் கொண்டு வந்தால், துணிச்சலாக அமல்படுத்தினார். யாராக இருந்தாலும் பயப்படாமல் பேசி கட் அண்ட் ரைட்டாக இருப்பார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் பார்க்க மாட்டார். அவரைப் பார்த்து அத்தனை கட்சிகளும் கொதித்தன.. ஆனால் மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இப்போது அப்படிப்பட்ட நிலையைக் காண முடியவில்லை. மக்கள் மனதில் இன்று நம்பிக்கை வெகுவாக சீர்குலைந்துள்ளது.. அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு நிறையவே உண்டு.