மின்வாரியத்தின் இழப்பு கிடுகிடு அதிகரிப்பு.. தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயருகிறதா?
சென்னை: தமிழகத்தில் 30 சதவீத அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக 30 சதவீத அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாாியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் ஆண்டுதோறும் வரவு செலவு அறிக்கையை அளிக்குமாறு மின்வாரியத்திடம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியது.
இந்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழக அரசு 2 மாதங்களுக்கு முன்பே கணிசமான அளவு மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் அப்போது தேர்தல் சமயம் என்பதால் வாக்கு வங்கியை யோசித்து, மின் கட்டண உயர்வை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. தற்போது தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ள மின் கட்டண உயர்வை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாகியுள்ளதாக கூறியுள்ளது.
திட்டமிட்டுள்ளபடி மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், சாதாரண மின்நுகர்வோர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் பெரும் சுமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தற்போதைய மின்தேவை 14,500 மெகா வாட்டாக உள்ளது. அதே நேரம் உற்பத்தி செய்யப்படும் மி்சாரத்தின் அளவு 11,000 மெகாவாட் மட்டுமே. இதனால் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.5.50 பைசா என்ற கூடுதல் விலைக்கு, தனியாரிடமிருந்து 4500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் வாங்கி வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.7,818 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் கூறியுள்ளனர். இந்த இழப்பை ஈடுகட்டவே தற்போது நுகர்வோர்கள் தலையில் கை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் நுகர்வோரிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏற்கனவே அதிகமான மின் கட்டணத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.