"அவர்" வருகிறார்.. "இவர்" வருவாரா.. அவரை பார்க்க.. பரபரப்பு எதிர்பார்ப்பில் மதுரை!
மதுரை வரும் பிரதமர் விழாவில் மு.க. அழகிரி பங்கேற்பாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: மதுரைக்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் மு.க.அழகிரி கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.
மு.க.அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அமைதியாகவே ஒதுங்கி இருக்கிறார். கருணாநிதி இறந்தபிறகு சவால் விட்டு, பேரணி நடத்தினார்.
கடைசியில் தடாலடியாக கட்சியில் தன்னை சேர்த்து கொள்ளும்படி மிரட்டினார், கெஞ்சினார். அழகிரியின் இந்த அடுத்தடுத்த தடாலடிகளை தொடர்ந்து பார்த்தவர்கள், திமுகவில் அழகிரியை சேர்த்து கொள்ளவில்லை என்றால், தனியாக கூட ஒரு கட்சியை ஆரம்பிப்பார் என்று முணுமுணுத்தார்கள்.
வளைத்து போடும்
மேலும் சிலர், பாஜகவை திமுக தொடர்ந்து பகிரங்கமாக எதிர்த்து வருவதால், அழகிரியை பாஜக தன் பக்கம் இழுத்து வளைத்து போடக்கூடும் என்று ஒரு தகவலை கொளுத்தி போட்டார்கள்.
திமுக பலவீனம்
இதற்கு காரணம், அழகிரி பாஜக பக்கம் சென்றுவிட்டால், மு.க.ஸ்டாலினின் வெறுப்பை எளிதாக சம்பாதித்து விடுவார் என்பதுடன், திமுகவுக்கு அது ஒரு பலவீனத்தை ஏற்படுத்தி, ஓட்டுகளையும், நன்மதிப்பையும் எளிதாக சிதறடிக்கலாம் என்று கணக்கு போட்டதாகவும் சொல்லப்பட்டது.
பாஜகவில் இணைவாரா?
அதற்கேற்ற மாதிரி இதுவரை மு.க.ஸ்டாலின் அளவுக்கு மு.க.அழகிரி பாஜகவை விமர்சிக்காமலேயே உள்ளார். இந்நிலையில் நாளை மதுரை பிரதமர் மதுரை வர போகிறார். இதனால் மருத்துவமனை விழாவில் அழகிரி பங்கேற்பாரா? பிரதமரை சந்தித்து பேசுவாரா? பாஜகவில் சேர்வதற்கான வாய்ப்புகள் ஏதாவது நிகழுமா என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தென்பிராந்திய தளபதி
ஆனால் அழகிரி பாஜகவில் சேர்ந்தாலோ அல்லது பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டாலோ அவர் மீது நம்பிக்கை மற்றும் அபிமானத்துடன் இருக்கும் கொஞ்சநஞ்ச திமுக முன்னணியினரும் அவரை வெறுக்கவே செய்வார்கள் என்று தெரிகிறது. காரணம், அழகிரியை தனி மனிதராக யாரும் பார்க்கவில்லை. இன்னும் கருணாநிதி மகனாகவே, திமுகவின் தென் பிராந்திய தளபதியாகவே பார்க்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட முடிவை அழகிரி எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.