நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது - காரணம் சொன்ன வானிலை ஆய்வு மையம்
நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். அடர்த்தியான மேக மூட்டம் இருப்பதால், நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகவில்லை என்றும் அதற்கான காரணத்தை புவியரசன் விளக்கியுள்ளார்.
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை கடந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது.
நிவர் புயலானது 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு கண் பகுதி உருவாகவில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் என்று பெயர்.
புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30 - 65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைத்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது.
புயல் மழை பாதிப்பு.. கடலூருக்கு கை கொடுக்கும் சேலம்.. பணியாளர்களும், உபகரணங்களும் கிளம்பியாச்சு
நிவர் புயலை சுற்றியும் அடர்த்தியான மேக மூட்டம் இருப்பதால், நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகவில்லை என்று அதற்கான காரணத்தை புவியரசன் விளக்கியுள்ளார். புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் போது அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.