எஸ்பிபி: எப்படியாவது மீண்டுடுவார் என நம்பினோமே.. எல்லா பிரார்த்தனையும் வீணாகிடுச்சே: ரசிகர்கள் கதறல்
பிரபல பாடகர் எஸ்பிபி காலமானார்
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி காலமானார்.. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. "எத்தனை பிரார்த்தனைகள் செய்தும் எல்லாமே வீணாகிவிட்டதே.. எப்படியாவது உயிர் பிழைத்து வந்துவிடுவார் என்று கடைசி நம்பிக்கையும் இருந்ததே.. எல்லாமே நொறுங்கிவிட்டதே" என்று ரசிகர்கள் கதறி அழுது வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பிபி.. கடந்த14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே எஸ்பிபியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எஸ்பிபி சரணும், ஆஸ்பத்திரி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், டாக்டர்கள் உதவியுடன் 20 நிமிஷங்கள் அவரால் எழுந்து உட்கார முடிகிறது என்றும் சொன்னார்கள்.. அதனால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் சொல்லப்பட்டது.. இந்நிலையில், நேற்று சாயங்காலம் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு அறிக்கை வந்தது.
அதில், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், டாக்டர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பும், சோகமும் பீடித்து கொண்டது..
அடுத்த சில மணி நேரங்களிலேயே மநீம தலைவர் கமல்ஹாசன், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள நேரடியாக ஆஸ்பத்திரிக்கே செல்லவும், மேலும் பதட்டம் அதிகரித்தது. அங்கு அவர் கிரிட்டிக்கலாக உள்ளதாகவே கமல் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்.
இதைக்கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக தீவிரமான பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.. "கடவுளே, தயவு செய்து எஸ்பிபியின் உயிரை காப்பாற்று. அவர் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும்... கவலைப்படாதீங்க சரண், நாஙக எல்லாருமே உங்க பிரார்த்தனைக்காக பிரார்த்தனை செய்கிறோம்.. கூட்டு பிரார்த்தனைக்கு வலிமை அதிகம்... நிச்சயம் அவர் வந்துடுவார்" என்று சோஷியல் மீடியா முழுவதுமே எஸ்பிபிக்கான பதிவுகள் வந்து கொண்டே இருந்தன.
நேற்று மாலைக்கு பிறகு அவரின் உடல்நிலை பற்றி வதந்தி வேறு பரவி கொண்டே இருந்தது.. அவர் எப்படி இருக்கிறார் என்று ஏன் அப்டேட் கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் தவித்தபடியே இருந்தனர். இன்று காலையில் இருந்தே உறவினர்கள் எஸ்பிபி இருந்த ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தனர்.. இன்னொரு பக்கம் ரசிகர்களும் பிரார்த்தனையும் விடாமல் நடந்தது.'
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை.. கர்நாடக சங்கீதம் தெரியாமலேயே.. கோலோச்சிய கலைஞன்!
கடைசிவரை தீவிரமான சிகிச்சை தந்தும், எஸ்பிபி உயிர் பிரிந்துவிட்டது.. இதைக்கேட்டு, திரையுலக பிரபலங்கள் முதல் கடைகோடி ரசிகர்கள் வரை கதறி துடித்து வருகின்றனர்.. அவருக்காக செய்த பிரார்த்தனை அத்தனையும் வீணாகிவிட்டதே என்று ரசிகர்கள் குமுறி அழுது வருகிறார்கள்.
"எப்படியாவது உயிர் பிழைத்து வந்துவிடுவார் என்று கடைசி நம்பிக்கையும் இருந்தது.. அவருக்கு நிறைய வில் பவர் அதிகம்.. அதனால்தான் இந்த முறையும் உயிர்பிழைத்து வந்துவிடுவார் என்று நம்பினோம்.. பிரார்த்தனைகள் செய்து கொண்டே இருந்தோம்.. எல்லாமே நொறுங்கிவிட்டதே.. இனி அந்த இமாலய சரித்திரத்தை எப்போது காண்போம்?" என்று ரசிகர்கள் கதறி அழுது வருகிறார்கள்.