வரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வரிசையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வரிசையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களை வென்றது.
இதன் மூலம் திமுக தமிழ்கத்தில் மீண்டும் முக்கிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் இந்த திமுக கூட்டணியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது.
வைகோ சண்டை
முதலில் வைகோ மூலம்தான் திமுக கூட்டணியில் முதல் பிரச்சனை வந்தது. காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ பேசியதுதான் இந்த சண்டைக்கு காரணம். காஷ்மீரில் காங்கிரஸ் கட்சிதான் பச்சை துரோகம் செய்தது. இந்த பிரச்சனைக்கு முதல் காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்தது. அதை தற்போது பாஜக தொடர்ந்து கொண்டு இருக்கிறது, என்று வைகோ பேசினார்.
காங்கிரஸ் தலைவர்கள்
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மிக கடுமையாக பதில் அளித்து இருந்தனர். மதிமுக எம்பி வைகோ அரசியல் நாகரீகமற்றவர். கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சிக்கிறார். என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல் காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் செய்யும் மதிமுக எம்பி வைகோ ஒரு நம்பர் ஒன் துரோகி, என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்தார்.
இப்போது என்ன
இந்த பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ப. சிதம்பரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் இடையே சண்டை வந்துள்ளது. இதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி சுதந்திர தின உரையை ப.சிதம்பரம் பாராட்டி இருந்தார். மோடியின் பேச்சில் இருந்த நான்கு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு ப.சிதம்பரம் பாராட்டி இருந்தார்.
இப்போது சிக்கல்
இந்த நிலையில் இதை முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி சொல்வதை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் என்ன நிர்பந்தம் என்று ப.சிதம்பரத்திற்கும், மோடிக்கு மட்டுமே தெரியும், என்று முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு
சண்டை
இதனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் இந்த இரண்டு சண்டை குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக தலைவர்களும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் நிலவும் இந்த பிரச்சனையால் கட்சித் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.