SPB எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் - மு க ஸ்டாலின்
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி பத்மஸ்ரீ- பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பிபியின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற முதல்வர் ஆவன செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மத்திய மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஸ்டாலின்.
என் உயிர் பிரிந்தால்.. 15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி.. எல்லாபுரம் கவுன்சிலர் தகவல்
உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.