சின்மயியிடம் கோபம் இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது.. ஆனால் ஆதாரமும் முக்கியமாச்சே!
வைரமுத்து மீதான ஆதாரத்தை தேடி கொண்டிருக்கிறேன் என சின்மயி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிட்டு, ஒட்டுமொத்த பேரையும் மீ டூ என்ற பேச்சாக பேச வைத்துவிட்டு தற்போது தன் கையில் ஆதாரம் இல்லை என்கிறார் சின்மயி. எங்கே என்றால், அதைதான் தேடி கொண்டிருக்கிறேன் என்கிறார்!!
நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் சின்மயி பேசிய பேச்சுக்கள் எதுவுமே சரியென்று மனம் ஒப்புக் கொள்ளவில்லை. நூறு சதவிதமான நிறைவான பதிலாக அவை அமையவில்லை. கல்யாணத்துக்கு எதற்கு வைரமுத்துவை அழைத்தீர்கள் என்றால், கார்க்கி எனது நண்பர், அப்பாவுக்கு பத்திரிகை வைக்கவில்லையா என கேள்வி கேட்டுவிடுவார், அதற்கு சங்கடப்பட்டுதான் பத்திரிகை வைத்தேன் என்கிறார்.
அப்படியென்றால், கார்க்கி இப்போது சின்மயிக்கு நண்பர் இல்லையா? பத்திரிகை என்ற சாங்கியத்துக்கே கார்க்கி சங்கடப்படுவார் என்றால், இப்போது பெற்ற தகப்பன் மீதே சேறை வாரி முகத்தில் பூசியதை கார்க்கி எப்படி எடுத்து கொள்வார் என்று சின்மயி யோசிக்கவில்லையா?
ஆதாரத்தை தேடுகிறேன்
ஏன் இந்த புகார் குறித்து கோர்ட்-க்கு போகவில்லை என்றால், பாஸ்போர்ட்டை காணோம் தேடி வருகிறேன். 15 வருஷத்தில் 10 வீடு மாற்றிவிட்டேன் என்கிறார். ஒரு நபர் மீது எப்படி அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல் பயங்கரமான குற்றச்சாட்டை வீசுவார் என்ற கேள்வி இயல்பாக வந்து செல்கிறது. முதன்முதலில் மீ டூ-வில் வைரமுத்து மீது புகார் அளிக்க துவங்கும்போதே தன்னிடம் ஆதாரம் இல்லை என்று தெரியும்தானே? அதையும் அப்போதே சின்மயி கூறியிருக்க வேண்டாமா?
ஐயங்கள் எழுகின்றன
தன் மீது வழக்கு தொடுத்தால் அதை நீதிமன்றம் மூலம் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று வைரமுத்து சொன்னதால், சின்மயி இப்படி ஆதாரம் இல்லை என்று கூறுகிறாரா என தெரியவில்லை. அதனால்தான் திரைத்துறை சங்கங்கள், காவல்நிலையம், நீதிமன்றம் என்று எங்கேயும் புகார் அளிக்க சின்மயி செல்லவில்லையோ என்ற ஐயங்களும் எழுகின்றன. எங்கே போனாலும் ஆதாரத்தைதான் முதலில் காட்ட வேண்டும்.
வாய்மொழி சாடல்களே
ஆரம்பத்தில் சின்மயி - வைரமுத்து விவகாரங்களில் யார் மீது தவறு என்றே சொல்ல முடியாத, நிலையில்தான் தமிழகம் திணறியது. நடுநிலைமையோடுதான் இந்த பிரச்சனையை தமிழகம் ஆராய்ந்தது. ஆனால் எந்த வித ஆதாரம் இல்லாமல், கோர்ட்டுக்கும் போகாமல், போலீசுக்கும் போகாமல் தற்போது வரை வெறும் வாய்மொழியாகவே தூற்றி கொண்டிருக்கும் சின்மயியின் வார்த்தைகள் மீதான நம்பிக்கைகள் குறைய துவங்கி உள்ளது.
சுசி கணேசன்
சின்மயி என்றில்லை, இதுவரை மீ டூ சம்பந்தப்பட்ட புகார் அளித்தவர்கள் யாருமே எந்தவித ஆதாரத்தையும் காட்டவில்லை, நீதிமன்றம், காவல்துறையையும் இவர்கள் நாடவில்லை. ஒரே ஒரு விதி விலக்காக தன் மீது குற்றம் சாட்டிய லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் மட்டுமே வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆதாரங்கள் அவசியம்
மீ டூ என்பது மிகச்சிறந்த இயக்கம். பெண்களுக்கான பாதுகாப்பினை வழங்ககூடிய, வரவேற்கத்தக்க ஒன்றுதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கான ஆதாரங்கள் முழுமையாக இருந்தால மட்டுமே இந்த மீ டூ இயக்கம் முழுமையாக மக்களிடத்தில் பிரதிபலிக்கும், பிரச்சனைகள் எடுபட்டு வெளிப்பட்டு பேசும்.
சுயநல குணமே
அவ்வாறு வேண்டாதவர்கள், விரோதிகள், பழி தீர்த்து கொள்பவர்கள், பொறாமை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், போன்றோரை முழுக்க முழுக்க தங்களின் ஆதாயத்துக்காக அவர்களின் மதிப்பை குலைத்து, சிறுக சிறுக சேர்த்திட்ட நற்பெயருக்கு ஒட்டுமொத்தமாகவே களங்கம் கற்பிக்க நினைக்கும் சுயநல குணமே ஆகும்.
கட்டமைப்பு தேவை
தகுந்த ஆதாரங்கள் இன்றி பொத்தாம்பொதுவாக அவதூறை வீசிவிடும் இயக்கமாகத்தான் மீ டூ இதுவரை தமிழகத்தில் கையாளப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்தவித பலனும் போய் சேரவில்லை. புகழ்பெற்றவர்களின் பெயர்கள்தான் மற்றொருபுறம் நாறடிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த மீ டூ குறித்து ஒரு ஒழுங்கீனம் தேவைப்படுகிறது, கட்டமைப்பு தேவைப்படுகிறது.. அதை வடிவமைக்கப்பட வேண்டி உள்ளது.
அவதூறு நின்றுவிடும்
குறிப்பாக மீ டூ-வில் புகார் கொடுக்க துணியும் யாராக இருந்தாலும் முதலில் தங்கள் சார்பாக காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற நியதியை உருவாக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்டவர்கள் மீது தவறு என்றால் அப்போது மீ டூவை அணுகலாம். இல்லையென்றால் பாதிக்கப்படும் ஆண்கள் மீது வீசப்படும் அவதூறுகள் அவதூறாகவே காலத்துக்கும் நின்றுவிடும்.