கண்காணிப்பு வளையத்திற்குள் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா... திங்களன்று தொடங்கும் விசாரணை..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக திங்கள்கிழமை முதல் விசாரணை தொடங்குகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு சூரப்பா மீதான விசாரணையை நடத்த இருக்கிறது. மூன்று மாதங்களில் நீதிபதி கலையரசன் குழு விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டது முதலே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் அவர். கர்நாடகாவை சேர்ந்த அவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் அவரை சுற்றி சர்ச்சைகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.
பகவத் கீதை விவகாரம் தொடங்கி அண்மையில் அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது வரை அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில் சூரப்பா தனது மகளுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்ததாகவும், தற்காலிக ஊழியர்கள் நியமனத்திற்கு பல லட்ச ரூபாய் பணம் பெற்றதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
அனுமதியின்றி பாஜக வேல் யாத்திரை நடத்தினால்... சட்டம் தன் கடமையை செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அதன் மீது விசாரணை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை விசாரணை நடத்த நியமித்திருப்பதோடு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் கேட்டிருக்கிறது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை முதல் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.