ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. எடப்பாடிக்கு நெருக்கடி.. சிக்கலில் அமைச்சர்கள்
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு இயற்றிய சட்ட விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தால் ஆளும் அதிமுகவிற்கும், முதல்வர் எடப்பாடிக்கும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள் அவர் கூறிய தகவலை மறைத்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு இதுவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் எழுதிய கடிதத்தில், உங்கள் கடிதம் எனக்கு 21ம் தேதி கிடைக்கப்பெற்றது அந்த கடிதத்தில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கேட்டிருந்ததீர்கள்.
சென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
ஆளுநர் கடிதம்
இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அனைத்து வகையிலும் ஆராய வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும். இதை என்னை சந்திக்க வந்த அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளேன்" இவ்வாறு கூறியிருந்தார்.
பெரிய அளவில் விவாதம்
இந்த கடிதத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய புயல் கிளம்பி உள்ளது. திமுக தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிமுகவை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளார். அவர் தனது அறிக்கையில், , 7.5% ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 4 வார காலமாகும் என்று தமிழக அமைச்சர்களிடமும் சொல்லிவிட்டேன் என்கிறார் ஆளுநர். 3-4 வாரங்கள் கவர்னர் காலம் வேண்டும் என சொன்னதை அமைச்சர்கள் ஏன் மறைத்தார்கள் என்று ஸ்டாலின் கேட்ட கேள்விதான் பெரிய அளவில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.
முன்னேறிய பிரிவினர்
மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருவதாக அமைச்சர்களிடம் ஆளுநர் சொன்னதாகவும் செய்தி வலம் வருகிறது. சமூகநீதியை சீர்குலைக்கும் கருத்து அது, நடந்தது என்ன என்பதை அமைச்சர்கள் விளக்குவார்களா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இது குறித்து இதுவரை தமிழக முதல்வரோ, அல்லது அமைச்சர்கள் தரப்பில் இருந்தோ எந்த பதிலும் வரவில்லை.
ஆளுநர் மாளிகை முன்பு
ஸ்டாலின் தனது அறிக்கையில். உள் இடஒதுக்கீட்டுக்காக அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று அறிவித்தேன். ஆனால் ஆளுநரை எதிர்த்து போராடும் துணிச்சல் முதல்வருக்கு இல்லை. மவுனம் சாதிக்கிறார். மாணவர் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரியும், அழுத்தம் கொடுக்கத் தவறி மாணவர்களுக்கு துரோகம் செய்யும், அதிமுக அரசை கண்டித்தும் நாளை (சனிக்கிழமை) ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் ஸ்டாலின். ஆனால் நாளை ஸ்டாலினே போராட்டத்தில் களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை
ஸ்டாலின் மீது புகார்
ஸ்டாலினின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டாலின் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார். . சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் நேரத்தில் தங்களால் கிடைத்தது என்ற மாயதோற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும், எடப்பாடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
எடப்பாடிக்கு நெருக்கடி
இந்த மசோதாவிற்கு இந்த ஆண்டு கலந்தாய்விற்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அது அதிமுக அரசுக்கு பெரும் புகழை பெற்றுத்தரும் என்கிற நிலையில், 300 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பார்கள். இந்த மசோதா விவகாரத்தில் அதிமுகவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆளுநர் முடிவடுக்க கால தாமதம் செய்துவருவது அச்சத்தை அதிகரிதுள்ளதால், இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை நேரடியாக சந்தித்து வெளிப்படையாக குரல் எழுப்பினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். முதல்வருக்கும் அதிமுகவுக்கும் ஆளுநரின் கடிதம் ஒருவித நெருக்கடியை அதிகரித்துள்ளது என்பது உண்மை.