கார்கில் நாயகன்.. ஈழ ஆதரவாளர்... மறக்க முடியாத ஜார்ஜ் பெர்னாண்டஸ்!
Recommended Video
சென்னை: பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை காலமானார். அல்சைமர் நோயினால் நீண்ட நாட்களாக படுக்கையில் இருந்தவர் இன்று காலமானார்.
கர்நாடக மாநிலத்தில் மத குருவாக பணியாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னர் தொழிற்சங்கவாதியாக மாறினார். கர்நாடக மாநிலம் மங்களூரில் ஜான் ஜோசப் பெர்னாண்டஸ் -ஆலிஸ் மார்த்தாவின் மகனாக 1930 ஜூன் 3-ம் தேதி பிறந்த அவர் புரட்சிகர எண்ணங்களினால் தூண்டப்பட்டார். அதன் விளைவு தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
இந்திராகாந்தி 1975- ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்தியபோது அதை கடுமையாக எதிர்த்து போராடியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அந்தக் கால கட்டத்தில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது மக்களிடையே மக்களாக மீனவர் மற்றும் சீக்கியர் வேடத்தில் மாறுவேடத்தோடு சுற்றி அரசின் அடக்கு முறைகளை எடுத்துரைத்தார். எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடந்த மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் குஜராத் போன்ற இடங்களில் தலைமறைவாக செயல்பட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் எமர்ஜென்சியின் நாயகன் என்றும் அழைக்கப்பட்டார். இருப்பினும் 1976 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட அவர், கை, கால்களில் விலங்கிடப்பட்டு சிறையில் காவல்துறையினரால் பெரும் கொடுமைக்கு உட்பட்டார்.
சிறையில் இருந்தபடி வெற்றி
அந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலில் பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றார். அந்த தேர்தல் அடக்குமுறையின் தோல்விக்கான தேர்தலாக அமைந்தது. அதில் இந்திரா காந்தி தோல்வியைடந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். தேசாயின் அமைச்சரவையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரயில்வே அமைச்சர் ஆனார். அதோடு கடந்த 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இவர் பணியாற்றி உள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு
ஈழத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தபோது இவர் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றவர். ஈழ விடுதலைப்புலிகளுக்கு இவரது வீடு, புகலிடம் கொடுத்ததோடு 1983-ம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைகளை புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டார். அதனால் தமிழர்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தா
கார்கில் வெற்றி
1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமயிலான தேசிய முன்னணி அரசில் 2004 - வரை பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். வாஜ்பாய் அரசில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது அதை முன்னின்று நடத்தி வெற்றிப் பெற்றுக்கொடுத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். லாகூர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இனி சண்டையில்லை, சமாதானம் என்று கை குலுக்கி கொண்டிருந்த வேளை. அந்நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரபுக்கு மூளைக்குள் பிசாசு குடிகொண்டது. 1999 - ம் ஆண்டின் மே மாதம் கார்கில் பகுதியில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. சுமார் 160 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டு நெடிதுயர்ந்திருந்த அந்த சாலை வழியாக பர்வேஷ் முஷாரபின் படைகள் உள்ளே ஊடுருவ தொடங்கியிருந்தன. இந்திய துருப்புகள் காலி செய்துவிட்டு சென்ற அந்த குன்றுகளில் அடைக்கலம் புகுந்தனர் பாகிஸ்தானியர்கள்.
ஜார்ஜ் உத்திகள்
எவ்விதச் சலனமும் இன்றி ஊடுருவி இருந்தவர்கள் ஒரு சுபயோக சுபதினத்தில் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறார்கள். இந்திய வீரர்கள் சுதாரிப்பதற்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியாவுக்குள்ளும் ஆத்திரத்தை ஊட்டுகிறது. தகவல் உண்மையென்று அறிந்ததும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவிய எல்லைக்கு உடனடியாக விரைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெஃர்னாண்டஸ் இனிப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவராக பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் கூறியதோடு அமைச்சரவையை கூட்டி பாகிஸ்தானை விரட்டியடிப்பது என்ற முடிவுக்கு வருகிறார். அந்த முடிவின்படியே 70 நாட்களை கடந்த நிலையில் பாகிஸ்தானுடம் இந்தியா போரிட்டது. கடைசியில் ஜார்ஜ் பெஃர்னாண்டசின் யுக்திகளுக்கு பெருவெற்றி கிடைத்தது