வருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு தரப்பினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட பட்ஜெட் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ராமதாஸ் வெளியிட்டுள்ளார் அதில் நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத வருவாய்ப் பிரிவினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது தான்.பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு மட்டும் வருமானவரி விலக்கு அளித்தார்.
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுவோருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அதேபோல், வருமானவரி விகிதமும் மாற்றியமைக்கப்படவில்லை. அதுபற்றி அப்போது பியுஷ் கோயலிடம் கேட்டபோது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, வருமானவரி தொடர்பான மக்களின் அனைத்து நியாயமான எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது மிகவும் நியாயமான வாதம். ஆண்டுக்கு சராசரியாக 10% என்ற அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்றவாறு மாத ஊதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு வருமானவரி விலக்கு உச்சவரம்பும் ஆண்டு தோறும் தானாக உயர வகை செய்யப்பட வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு வருமானவரி விலக்குக்கான ஆண்டு வருவாய் உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில், இம்முறை வருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.
அதேபோல், வருமானவரி விகிதமும் அடுத்தத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டிலிருந்து 10% அல்லது 5% ஆக குறைக்க அரசு முன்வர வேண்டும்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையையும், அதற்கான ஊதியத்தையும் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக உழவுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது. இந்நேரத்தில் அவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கி வாழ்வாதாரம் அளிக்க வேண்டியது மத்திய அரசின்.
அதுமட்டுமின்றி, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கைவிடப்படும், அதனால், கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று மக்களவைத் தேர்தலின் போது திட்டமிட்டு பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் ஒருசார்பாக வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். உண்மையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதை விட, நரேந்திரமோடி ஆட்சியில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதுடன், தமிழ்நாடு உள்ளிட்ட வறட்சி பாதித்த மாநிலங்களில் இத்திட்டப்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அரசு உயர்த்த வேண்டும் என அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.