ஹேப்பி நியூஸ்.. கார் விற்பனை விர்ர்.. ஜிஎஸ்டி வசூலும் சூப்பர்.. வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்
சென்னை: லாக்டவுன் காரணமாக துவண்டு போன இந்திய பொருளாதாரம் தற்போது எழுச்சியை நோக்கி செல்கிறது. பல்வேறு துறைகளில் காணப்படும் பாசிடிவ் சிக்னல்கள் இதை உறுதி செய்கின்றன.
நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பே பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில்தான் இருந்தது. ஆனால் லாக்டவுனால் மேலும் வீழ்ச்சிக்கு போனது.
லாக்டவுனில், அன்லாக் என்ற பெயர்களில், அவ்வப்போது தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, கடைகளை திறந்த நிலையிலும், மக்களிடம் வருமானம் இல்லாததால், பொருட்களை வாங்க ஆளில்லை. ஆனால், இப்போது இந்திய பொருளாதாரம் மீளத் தொடங்கியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சொந்தமானது அருணாசலப் பிரதேசம்.. சீனாவுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா!
ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு
பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆறு மாத வீழ்ச்சிக்கு பிறகு செப்டம்பரில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.. இது, பல மாத இடையூறுகளுக்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகளில் இயல்பு நிலை திரும்புவதைக் குறிக்கிறது. ஜிஎஸ்டி வசூல் செப்டம்பர் மாதத்தில் ரூ .95,480 கோடியாக இருந்தது, ஆகஸ்டில் ரூ .86,449 கோடியாக இருந்தது. ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ .91,916 கோடியாக இருந்தது.
டிராக்டர் விற்பனை
ஆட்டோமொபைல் துறையிலும் மீட்டெடுப்பு நடக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 13 சதவீதம் அதிக வாகனங்களை உற்பத்தியாளர்கள் டீலர்களுக்கு அனுப்பியுள்ளனர். டிராக்டர் விற்பனையும் அதிகரித்துள்ளது, மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா 18 சதவீத கூடுதல் விவசாய உபகரணங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது. நல்ல பருவமழை கிராமப்புற பொருளாதாரத்தை அதிகரித்துள்ளது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
விவசாய பயிர்கள்
"மக்களிடையே தேவை அதிகரித்துள்ளது, நல்ல பருவமழை, அதிக அளவு ஏக்கரில் கரீஃப் சாகுபடி நடந்திருப்பது, மற்றும் முக்கிய பயிர்களுக்கு அரசால் அதிகரிக்கப்பட்டுள்ள, குறைந்தபட்ச ஆதரவு விலைகள் உள்ளிட்டவை விவசாயத்திற்கு ஊக்கம் தந்துள்ளது. பண்டிகை காலத்தில் (தசரா மற்றும் தீபாவளி காலகட்டம்) மக்களிடம் அதிகம் பணப் புழக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று மஹிந்திரா நிறுவன வேளாண் உபகரணத் துறையின் தலைவர் ஹேமந்த் சிக்கா கூறியுள்ளார்.
டாப் கியரில் மாருதி சுசுகி கார்கள் விற்பனை
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா (எம்.எஸ்.ஐ) செப்டம்பர் மாதத்தில் மொத்த விற்பனையில் 30.8 சதவீதம் அதிகரித்து 1,60,442 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்நிறுவனம் 1,22,640 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குட்டி கார்களுக்கு டிமாண்ட்
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த மக்களிடையே பயம் இருக்கும் நிலையில், கார்களை நோக்கி மக்கள் கவனம் செல்கிறது. விலை அதிகம் இல்லாத குட்டிக் கார்களை வாங்க நிறைய பேர் விரும்புகிறார்கள். எனவே, சிறிய வகை கார்களின் விற்பனைதான் மாருதியின் மொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்துள்ளது. ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட குட்டி கார்களின் விற்பனை 27,246 என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 20,085 யூனிட்டுகளை விற்பனை செய்ததை ஒப்பிட்டால், குட்டிக் கார்கள் விற்பனை 35.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
கியா கார்கள் விற்பனை
செப்டம்பர் மாத விற்பனையில் கியா நிறுவனம் அதன் சொந்த சாதனையை உயர்த்தியுள்ளது. கியா நிறுவனம் தனது சமீபத்திய அறிமுகமான கியா சோனெட் காம்பாக்ட் எஸ்யூவிக்கான விற்பனையில் பெரும் ஏற்றம் கண்டுள்ளது. கியா நிறுவன கார்களின் மொத்த விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிட்டால் இந்த ஆண்டு 147 சதவீதம் உயர்ந்துள்ளது. 18,676 கார்கள்தான் விற்பனையானது. இது மாருதியை ஒப்பிட்டால் மிக குறைவுதான். ஆனாலும், கியா நிறுவனத்தின் முந்தைய கால விற்பனையை ஒப்பிட்டால் இது அதிகம்தான்.