எங்களுக்காக ஒலித்த உங்கள் குரல்... ஓமனில் இருந்து ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய சிறுமி
சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்ததால் அவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுவதாக கூறி ஓமன் நாட்டில் இருந்து ஹாஷினி பிரியா என்ற சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மீது ஸ்டாலின் கொண்டுள்ள அக்கறையை பார்க்கும் போது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு வணக்கம் என்று தொடங்கும் அந்த கடிதத்தில் சிறுமி ஹாஷினி பிரியா கூறியிருப்பதாவது;
'' நான் ஹாசினி ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலிருந்து எழுதுகிறேன். எங்களை போன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் நலனில் அக்கறையோடு தாங்கள் நலம் விசாரித்ததை கலைஞர் செய்தி தொலைக்காட்சி மூலம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி''.
''தாங்கள் முதல் குரல் கொடுத்ததால் 13.05.2020 (இன்று) ஒரு விமானம் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வருகிறது. அதில் 180 பயணிகள் தாய்நாடு வருகிறார்கள். பெரும்பாலும் கர்ப்பிணி தாய்மார்களும், வயதான தாத்தா பாட்டிகளும், நோய்வாய்பட்டவர்களுமே வருகிறார்கள் என திமுக ஒருங்கிணைப்பாளர் எங்கள் தந்தையிடம் தொலைபேசியில் கூறியதை நான் கேட்டேன்.
மேலும், அவர்கள் பேசும் போது ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக பயணிகள் பதிவு செய்து பயணம் செய்ய இயலாமல் ஏமாற்றத்தோடு காத்திருப்பதாக கவலையோடு பேசிக்கொண்டதை கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.''
ஐடி ரிட்டர்ன்.. நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. நிர்மலா சீதாராமன் தந்த சலுகை
''இவர்களில் இன்னும் அதிகமான தாய்மார்களும், தாத்தா பாட்டிகளும், நோயாளிகளும், வேலை இழந்தவர்களும், மாணவர்களும் இருக்கிறார்களாம். எனவே தான் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். உடனடியாக காத்திருக்கும் அனைத்து பயணிகளையும் தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அன்போடும், தாழ்மையோடும், பாசத்தோடும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.''
மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு சிறுமி ஹாஷினி பிரியா தெரிவித்துள்ளார்.