கிராமப்புற இளைஞர்கள் டாக்டர்கள் ஆக கூடாது என்பதே மோடி அரசின் திட்டம்.! முத்தரசன் தாக்கு
சென்னை: மருத்துவ படிப்பில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்பட்டு வரும் நீட் நுழைவுத் தேர்வில் வினாக்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்டு வருகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்து மருத்துவராக நினைக்கும் ஏழை மாணவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவராக முடியாத விரக்தியில் உயிர் நீத்தார் அனிதா. அவர் உயிரிழப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலமான எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்திலும் கட்டாயமாக்கியது.
இதன் விளைவாக அனிதாவை தொடர்ந்து கடந்த இரு வருடங்களாக ஏராளமான மாணவ மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி, ஒருமனதாக இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரியது தொடர்பான தமிழக அரசின் இரு சட்டமசோதாக்களை நிராகரித்து விட்டதாக, மத்திய அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது மத்திய அரசு.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கிராமப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆகிவிட கூடாது என்பதே பாஜக அரசின் திட்டமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதே போல நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை அவமானப்படுத்தும் நோக்கில் பாஜக அரசு நடந்து வருவதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைத்து அவர்களை முற்றிலும் நிராகரிக்கிறது மத்திய அரசு என கடுமையாக சாடியுள்ளார்.