கொசுவின் தத்துவம்.. அழகாக பின்னப்பட்ட ஒரு கதை.. சிம்ப்ளி சூப்பர்ப் படம்!
சென்னை: சினிமாக்கள் எல்லாம் முன்பு போல இல்லை.. சின்ன விஷயமாக இருந்தாலும் கூட.. அதை நுனுக்கமாக பார்த்து விட்டு.. பங்காளி அதில் ஒரு குறை இருக்கு பாரு என்று துல்லியமாக விமர்சிக்கும் கால கட்டம் இது.. அப்படிப்பட்ட நிலையில் ஒரு வித்தியாசமான கதைக் களத்துடன் படமாக உருவாகியிருக்கிறது "தி மஸ்கிட்டோ பிளாசபி".
ரொம்ப வித்தியாசமாக, எடுக்கப்பட்ட ஒரு க்யூட்டான படமாக இது உருவாகியிருக்கிறது. நாளை இப்படம் "முபி ஓடிடி" தளத்தில் வெளியாகிறது.
விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற "லென்ஸ்" படத்தை இயக்கியவரான ஜெயப்பிரகாஷ் தான் தி மஸ்கிட்டோ பிளாசபி படத்தையும் இயக்கியுள்ளார். சுரேஷ் கதைநாயகனாக நடித்துள்ளார். கதை என்று பார்த்தால் ரொம்ப சிம்பிள்.. ஆனால் அதைப் பின்னியுள்ள விதம் ரசிக்க வைக்கிறது.
சுரேஷுக்குக் கல்யாணம்.. அந்த செய்தியை தனது நண்பர்களிடம் சொல்வதற்காக நண்பர் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு வைத்து நடக்கும் உரையாடலின்போது பல விஷயங்களை அவர் அறிந்து கொள்ள நேரிடுகிறது. கடைசியில் என்ன நடக்கிறது.. இதுதான் படத்தின் கதை.
காலா காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கங்களுக்கும், நவீனத்துவத்துக்கும் இடையிலான ஒரு சமூக அலசலாக இந்தப் படம் விரிவடைகிறது. தான் அழுத்தமாக நம்பியிருக்கும் பல விஷயங்கள் வெற்று பலூனாக இருப்பதாக இந்த நண்பர்கள் சந்திப்பின்போது உணர்கிறான் நாயகன். அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் அவனை ரொம்பவே குழப்பி விடுகின்றன.
சுரேஷ் சோமசுந்தரம் குமார், ஜெயப்பிரகாஷ், சிந்து, பிரதீப், ரவி ஆகியோர்தான் படத்தின் கதாபாத்திரங்கள். உலக அளவில் எத்தனையோ விதமான சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வழக்கமான சினிமாக்கள் போல இல்லாமல் ஒரு படம் எடுப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லாதது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே காட்டுவதும் எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் அந்த ரியாலிட்டியை காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜேபி.
நிஜமான வாழ்க்கைக்கும், நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான குழப்பங்களை இந்தப் படத்தில் விவரித்திருக்கிறார். ஒரு சாதாரண சாயங்கால பார்ட்டியின்போது சுரேஷும், ஜெயப்பிரகாஷும் இணைந்து இந்த கதையை உருவாக்கியுள்ளனர். அதன் பிறகு அப்படியே மெல்ல மெல்ல அதை பட்டை தீட்டி படமாக கொண்டு வந்துள்ளனர். கதையை உருவாக்கிய அடுத்த நாள் மாலையே படப்பிடிப்பையும் நடத்தியுள்ளனர். நண்பர்கள், குடும்பத்தினர் இதில் பங்கேற்க படம் சாத்தியமாகி விட்டது.
ஒரு மதுக் கடையில் ஆரம்பித்த கதை அப்படியே மெல்ல மெல்ல அழகாக நகர்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது யாரும் ரீடேக் வாங்கவில்லை. ரிகர்சல் கூட பார்க்கவில்லை. ஸ்கிரிப்ட் ரெடி செய்யவில்லை. அனைவருமே அந்தந்த இடத்தில் எல்லாவற்றையும் விவாதித்து பேசி அப்படி அப்படியே படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். சொந்த அனுபவங்களை வைத்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் ஜேபி கூறுகையில்,"சரியான கோணத்தில் காட்சிகளை படமாக்கியது மட்டுமே எனது வேலையாக இருந்தது. 2 நாள் மாலை, மொத்தமே 6 மணி நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். மணப்பெண்ணாக நடித்த அனுஷா பிரபு சம்பந்தப்பட்ட காட்சியை மட்டும் தனியாக எடுத்து சேர்த்தோம். அவருக்கு முன்பே அவருடைய வசனங்களையும், காட்சியையும் விளக்கி விட்டோம்.
படப்பிடிப்பின்போதுதான், இயல்பாக எடுக்கப்படும் காட்சிகளின் சக்தியை நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு விஷயத்தையும் உயிர்ப்போடும், உண்மையாகவும் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். இதுதான் ஒரு கலையையும் உயிர்ப்போடு வைக்க உதவும். அருமையான வாழ்க்கை முரண்பாடுகளை படமாக்கும் ஒரு அருமையான முயற்சியாக இதை பார்க்கிறேன் என்று கூறினார் ஜேபி.
இயக்குநர் ஜெயப்பிரகாஷ் அடிப்படையில் ஒரு சாப்வேட்ர் என்ஜீனியர்.இந்தியாவில் பணியாற்றத் தொடங்கி பின்னர் அமெரிக்காவின் சியாட்டிலில் செட்டிலானவர். அங்கு இருந்தபோதுதான் சியாட்டில் நடிப்பு பள்ளியில் நடிப்புக் கலையை பயின்றார். 10 வருடங்களுக்குப் பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பி நடிப்பில் முழு நேரமாக இறங்கினார்.
நடிப்போடு, எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் பிறந்தது. இதையடுத்து அவர் உருவாக்கிய திரைக்கதைதான் லென்ஸ். கிட்டத்தட்ட 2 வருடங்களில் லென்ஸ் உருவாகி வெளியானது. அந்தப் படத்தின் கதை போல்டாகவும், துணிச்சலாகவும் இருந்ததால் அதை தானே தயாரித்து இயக்க முடிவு செய்து அதன்படி செய்தார். அப்படத்தில் அரவிந்த் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இப்படத்திற்காக 2015ன் சிறந்த அறிமுக இயக்குநருக்கான கோலப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருதையும் பெற்றார் ஜேபி. பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இது திரையிடப்பட்ட பாராட்டுக்களையும் பெற்றது. இந்தியாவில் திரைக்கு வந்து பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் பின்னர் நெட்பிளிக்ஸிலும் இடம் பெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்றது.