அக்டோபர் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய நடைமுறை.. மக்கள் கவலை
சென்னை: அக்டோபர் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை வரப்போகிறது. இந்த நடைமுறையின் படி ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே நேரில் வந்து இனி பொருட்களை வாங்க முடியும். இந்த நடைமுறையால் வேலைக்கு செல்லும் மக்கள், வயதானவர்கள், முதியவர்கள் வந்து வாங்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்
தமிழகத்தில் 34,773 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 2,09,45,217 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. பருப்பு, சர்க்கரை, பாமாயில் குறைந்த அளவே வழங்கப்படுகிறது. அதற்கு பணம் கட்ட வேண்டும். கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களின் வீடுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் தற்போது உள்ள நடைமுறையின் படி, ஸ்மார்ட்டு கார்டுடன் சென்றால் தான் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டை , ரேஷன் கடைகளில் உள்ள எந்திரத்தில் வைத்தால் அதில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும். நீங்கள் யார், உங்கள் குடும்பத்தினரின் விவரம் தெரியும். அத்துடன் உங்களுக்கு எவ்வளவு அளவு பொருட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் காட்டும். அதன்படி பொருட்கள் வழங்கப்படுகிறது. அப்படி வாங்கப்பட்ட பொருட்கள் எவ்வளவு, அதற்கான பில் ஆகியவை தெரியவரும்.
அதிமுக தொண்டர்கள் வாக்களித்து முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம்- இப்படியும் வேண்டுகோள்!
சந்தேகம்
ஆனால் இந்த நடைமுறையின் படி, பிற நபர்கள் பொருட்களை வாங்கி கொண்டு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. கார்டுகளில் குறிப்பிட்ட நபர்கள் வராமல், கார்டுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், ஒருவரே இரண்டு முதல் பல கார்டுகளை கொண்டு வந்து பொருட்களை வாங்கி செல்வதாக நிறைய புகார்கள் வந்துள்ளது. இவர்கள் உண்மையில் உறவினர்களா, அல்லது வியாபாரிகளா என்ற சந்தேகம் அரசுக்கு எழுந்ததால் இந்த புதிய நடைமுறை வந்தள்ளது.
நீங்களே போக வேண்டும்
இந்த நடைமுறையின் படி ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி பொருட்கள் வாங்க முடியும். பக்கத்து வீட்டுக்கார்கள், சொந்தக்காரர்களை வைத்து இனி வாங்கவே முடியாது. வேலைக்கு செல்கிறேன். என்று உறவினர்களை வைத்து இனி பொருட்களை வாங்க முடியாது. ஏனெனில் கைரேகை வைத்தால் தான் உங்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். தற்போது உள்ள விவரங்களின்படி, மொத்தம் உள்ள 6,76,18,960 பேரில், 6,71,44,041 பேரின் ஆதார் விவரங்கள் ஸ்மார்ட் கார்டில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒடிபி சிஸ்டம்
மாதம் மாதம் கைரேகை வைக்க வேண்டும். பயோமெட்ரிக்கில் கைரேகை பொருந்த வேண்டும். ஒரு வேளை வயதானவர்கள், கடினமா வேலை செய்பவர்களின் கைரேகை பொருந்தவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ரேஷன் கார்டில் இணைக்க கொடுத்த மொபைல் போனை எடுத்து வாருங்கள். அதில் வரும் ஒடிபியை வைத்து பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய எந்திரங்களும், பயிற்சியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
லீவு போட்டு வரணும்
இதனால் அடுத்த மாதம் முதல் பயோமெட்ரிக் முறைப்படிதான் பொருட்கள் வழங்கப்படும். அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நேரில் செல்ல வேண்டியது கட்டாயமாகும். இந்த நடைமுறை குறித்து மக்களிடம் கருத்து கேட்ட போது பலர் கவலையை வெளிப்படுத்தினர். இது பற்றி மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், எங்க ரேஷன்ல ஒரு நாள் அரிசி ஒரு நாள் சர்க்கரை போடுவாங்க மாசத்துல எத்தனை நாள் வேலைக்கு லீவு போட்டு போறது பசங்க சின்ன பசங்க அவங்கள எப்படி அனுப்புறது இந்த திட்டம் வேலைக்கு போறவங்களுக்கு பெரிய கஷ்டம் என்றார்.
கடைக்கு போகாமல் தெரியணும்
சென்னையைச் சேர்ந்தவர் கூறுகையில். அன்றைய தினம் கடை திறந்திருக்கிறதா இல்லையா என்றும் என்ன பொருள் கிடைக்கும் என்று கடைக்கு போகமலேயே தெரிந்து கொள்ள ஏதுவாக ஏதாவது வசதி செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.
வீடு தேடி வழங்க வேண்டும்
சமூக வலைதளவாசி ஒருவர், எங்களது குடும்பத்தில் எங்களுடைய அத்தை கண் பார்வை குறைபாடு மற்றும் நடக்க முடியாதவர் . எங்கள் வீட்டில் இருந்து ரேஷன் கடைக்கு 2 கிலோமீட்டர் அவர்களை எப்படி அழைத்து செல்வது. ஆட்டோ செலவிற்கு 300 ரூபாய் செலவு ஆகும். அவர்களுக்கு வழங்கப்படும் அரிசி 5 கிலோதான் என்று வேதனை தெரிவித்தார். முதியவர்கள்/மாற்று திறனாளிகள்/உடல் நலம் குன்றியோர் ஆதாரில் பதிந்து உள்ள தகவல்கள் மூலம் அறியப்பட்டு அவர்களுக்கு வீடுவரை சென்று ரேசன் பொருட்களை வழங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.