"ஆபரேஷன் திராவிடா".. தமிழ்நாடு, கேரளாவை சுற்றி சுற்றி வரும் ராகுல்.. பின்னணியில் அந்த காரணம்!
சென்னை: தென்னிந்தியாவில் வென்றுவிட்டால் மீண்டும் காங்கிரஸ் புதிய எழுச்சி பெற்றுவிடும் என்று ராகுல் காந்தி தீவிரமாக நம்புகிறார்.. தமிழகம், கேரளாவில் ஆளும் கட்சியில் இடம்பெற்றால் அது காங்கிரசின் எதிர்காலத்திற்கு சிறந்த "ரீ ஸ்டார்ட்டாக" இருக்கும் என்று ராகுல் நினைக்கிறார்.. அவரின் இந்த நினைப்பிற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளன!
2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்து வரும் பிரச்சாரம் பெரிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது. கேரளா, தமிழகம் ஆகிய இரண்டு தென் மாநிலங்களை குறி வைத்து ராகுல் செய்யும் இந்த பிரச்சாரம் வடஇந்திய ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அட.. இவர் என்ன வடஇந்தியாவில் சொதப்பிவிட்டு இப்படி தென்னிந்தியாவில் ஸ்கோர் செய்து கொண்டு இருக்கிறாரே என்று பலரும் ஆச்சர்யப்பட தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே இவரின் பிரச்சார யுக்தி கவனம் பெற்றுள்ளது.
என்ன காரணம்
யூ டியூப் சமையல் சேனலுடன் சேர்ந்து கிராமத்து சமையல் செய்வது,மீனவர்களுடன் மீன் பிடிப்பது, குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, மாணவிகளுடன் செல்பி எடுப்பது, கல்லூரியில் மாணவியுடன் புஷ் அப் எடுப்பது என்று ராகுல் காந்தி மக்களோடு மக்களாக இறங்கி செய்து வரும் பிரச்சாரம் யுக்தி மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் ராகுலின் "பிஆர்" வேலைகள் இப்படி எல்லாம் கவனிக்கப்பட்டதே இல்லை! ராகுலின் இந்த பிரச்சாரத்திற்கு பின் ஒரு பின் கதையும், நான்கு காரணங்களும் இருக்கின்றன..
பின்கதை
அது என்ன பின் கதை என்று கேட்கிறீர்களா? 2014 லோக்சபா தேர்தலுக்கு பின்பில் இருந்தே காங்கிரஸ் கட்சி வடஇந்தியாவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. லோக்சபாவிற்கு 22% இடங்களை கொடுக்கும் உத்தர பிரதேச, பீகார் மாநிலங்களில் காங்கிரஸ் இருக்கிற இடமே தெரியவில்லை. பாரம்பரியமான அமேதி தொகுதியிலேயே 2019 லோக்சபா தேர்தலில் ராகுல் தோல்வி அடைந்துவிட்டார்.
தோல்வி
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலில் வென்றாலும் கூட 2019ல் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இங்கு மண்ணை கவ்வியது. இங்கு மொத்தமாக காங்கிரஸ் வெறும் 3 லோக்சபா தொகுதிகளில் மட்டுமே வென்றது. லோக்சபா தேர்தலில் வடஇந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி பெரிய அடி வாங்கியது. இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது.காங்கிரஸ் வென்ற 44 லோக்சபா தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகள் தெற்கில் இருந்து வந்த தொகுதிகள்தான்.
ராகுல் பிளான்
இந்த வடஇந்திய சறுக்கல்தான் ராகுல் காந்தி தென்னிந்தியா மீது கவனம் செலுத்துவதற்கான காரணம். தென்னிந்தியாவில் பெரிய இடம் பிடிப்பதன் மூலம் மீண்டும் வடஇந்தியாவில் ''மீண்டும்'' வெற்றிபெற முடியும் என்று ராகுல் நம்புகிறார். வடக்கு, வடமேற்கு, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என்று எங்குமே காங்கிரஸ் வலுவாக இல்லை. மகாராஷ்டிராவில் கூட ஆட்சியில் காங்கிரஸ் "ஜூனியர் பார்ட்னர்" மட்டுமே.. இதனால் தெற்கில் இருந்து எழுச்சியை தொடங்கலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது.
எழுச்சி
காங்கிரஸ் கணக்குப்படி 2019 லோக்சபா தேர்தலில் 29 லோக்சபா இடங்களை தெற்கில் இருந்துதான் வென்றது. இதே வேகத்தில் போட்டியிட்டால் சட்டசபை தேர்தலிலும் அதிக இடங்களை வெல்ல முடியும். முக்கியமாக தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டிலும் அதிக இடங்களை வெல்ல முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. பாஜக என்னும் இமாலய சக்தியை எதிர்க்க தெற்கு மாநிலங்களை ராகுல் நம்ப தொடங்கி உள்ளார்.
ஆட்சி
தமிழகத்தில் திமுகவுடன் சேர்ந்து ஆட்சி, கேரளாவில் லோக்சபா தேர்தலில் வென்றது போல அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடிக்கலாம் என்று ராகுல் காந்தி திட்டம் வகுத்து இருக்கிறார். இப்படி இந்த இரண்டு மாநிலங்களை ராகுல் நம்புவதற்கு பின் இருக்கும் 4 காரணங்கள்தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது என்கிறார்கள்.
காரணம் 1
தமிழகமும், கேரளாவும் பாஜகவிற்கு எதிராக இருக்கும் மாநிலங்கள். இங்கும் கூட பாஜக வந்துவிட்டால் அவ்வளவுதான் காங்கிரசை வேறு எங்குமே மீட்க முடியாது.. இதற்காக பாஜகவும் ஆபரேஷன் திராவிடவை பல வருடமாக திட்டமிட்டு தென்னிந்தியாவை பிடிக்க முயன்று வருகிறது , தென்னிந்தியாவிலும் தோல்வி அடைந்தால் அது காங்கிரசின் முடிவாக இருக்கும் .. என்று ராகுல் காந்தி கருதுகிறார். காங்கிரசுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரே இடமாக இந்த இரண்டு மாநிலங்களை இவர் கருதுகிறார். இதுதான் தமிழகம், கேரளாவை ராகுல் விடாமல் பின் தொடர காரணம் என்கிறார்கள்.
காரணம் 2
ராகுல் காந்தி தன்னுடைய தனிப்பட்ட இமேஜை உயர்த்த இந்த தேர்தல் மட்டுமே வாய்ப்பாக இருக்கும். வடஇந்தியாவில் என்ன செய்தாலும் மக்கள் இவரை பெரிதாக கண்டுகொள்வது இல்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் இவரை வரவேற்று ஏற்றுக்கொள்வதன் காரணமாக தன்னுடைய இமேஜை தெற்கில் இருந்து மாற்றும் எண்ணத்தில் ராகுல் இருக்கிறார்.
காரணம் 3
காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் பெறும் எண்ணம் ராகுலுக்கு உள்ளது. முறையாக கட்சி தேர்தலை சந்தித்து தலைவராக அவர் நினைக்கிறார். தென் மாநில தேர்தலில் வென்றால் இந்த தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என்று ராகுல் நினைக்கிறார். இதுதான் மேற்கு வங்கம், அசாமை விட்டுவிட்டு.. தெற்கில் ராகுல் தீவிரம் காட்ட முக்கிய காரணம் என்கிறார்கள்.
காரணம் 4
ராகுலுக்கு மதிப்பு அளிக்கும் ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதனால் எப்படியாவது தமிழகம் மூலம் வடஇந்தியா முழுக்க தன்னை ஒரு தலைவராக முன்னிறுத்த ராகுல் நினைக்கிறார். தென்னிந்திய மக்கள் மதத்திற்காக வாக்களிப்பது இல்லை என்று ராகுல் கூறியதும் இதை கருத்தில் கொண்டே. தமிழகத்தில் இருந்து மாற்றம் பிறக்கும் என்று ராகுல் போகிற மேடைகளில் எல்லாம் சொல்வதற்கும் இதுவே காரணம். தமிழகத்தில் வென்றால் கர்நாடக, ஆந்திரா, கோவா என்று வெல்ல முடியும் என்று ராகுல் நம்புகிறார்.
தென்னிந்தியா
இதுதான் அவர் தென்னிந்தியாவை இந்த அளவிற்கு குறி வைக்க காரணம். இந்திய தேசிய அரசியலில் தென்னிந்தியா மீண்டும் எழுச்சி பெற முடியும் என்று ராகுல் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால் இதெல்லாம் வாக்காக மாறுமா என்பது சந்தேகம்தான். ராகுலின் இமேஜ் பெரிய அளவில் தென்னிந்தியாவில் மாறியுள்ளது உண்மைதான்.. ஆனால் வடஇந்தியாவில் ராகுல் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன!