வேலையின்மை எதிரொலி - பொறியியல் படிப்பு மீதான மோகம் தமிழக மாணவர்களுக்கு குறைந்தது..!
சென்னை: வேலையின்மை எதிரொலியால் பொறியியல் படிப்பு மீதான மோகம் தமிழக மாணவர்களுக்கு குறைந்துள்ளது.
ஒரு காலத்தில் இன்ஜினியர் மாப்பிள்ளை என்றால் அவர்களுக்கு தனி மவுசு இருந்த நிலையில் இன்று இன்ஜினியர் என்றாலே பலரும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள். பி.இ. முடித்துவிட்டு எட்டாயிரம் ரூபாய்க்கும் பத்தாயிரம் ரூபாய்க்கும் பணியாற்றக் கூடிய சூழல் நிலவுவதே இந்த தயக்கத்திற்கு காரணமாகும்.
இன்ஜினியர் என்றாலே சமூகத்தில் தனி மதிப்பும், மரியாதையும் இருந்த காலம் போய், இன்று அவர்கள் இருக்கும் இடம் தெரியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் முழுமையாக நிரம்பாமல் காற்று வாங்கிக் கொண்டு இருக்கின்றன.
இதற்கு காரணம் மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டாமல் ஒப்புக்கு பாடங்களை நடத்தி கட்டணங்களை வசூலித்து வந்ததே ஆகும். இது எல்லா பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தாது. பல பொறியியல் கல்லூரிகள் பொறியியல் படிப்புக்கான கட்டமைப்பை முறையாக செய்து வைத்திருக்கின்றன. ஒரு சில கல்லூரி நிர்வாகங்கள் செய்யும் தவறுகளால் அந்த துறை மீதான பார்வையே வேறு மாதிரியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டமாக நிறைவடைந்துள்ள நிலையில் வெறும் 21,422 பேர் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 461 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும் சூழலில் ஒரு லட்சத்து 63,000 இடங்கள் இருக்கின்றன. அதில் கால்வாசி இடங்கள் கூட நிரம்பாதது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நான்கு கட்டமாக நடைபெறும் சூழலில் முதல் இரண்டு கட்டத்திலேயே 21,000-ஐ தாண்டாததால் பொறியியல் கல்லூரி அதிபர்கள் மிகுந்த கலக்கம் அடைத்துள்ளனர். மொத்தமாக நான்கு கட்ட கலந்தாய்வையும் சேர்த்தாலும் இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை 60,000-ஐ தாண்டாது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நாளுக்கு நாள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், விஸ்காம், ஃபேஷன் டிசைனிங், உள்ளிட்ட தொழிற்படிப்புகள் மீது மாணவர்களுக்கு மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.