பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. பத்திர பதிவு.. பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்
சென்னை: இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை ஏனெனில், இனி பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்குதல் விற்றல் செய்ய தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு செய்யப்படுகிறது.
இந்த பதிவு முடிந்த உடன் பத்திரப்பதிவு செய்தவர்கள் பட்டாவில் பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படும்.
தாமதம்
அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல் பெற தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டும். அங்கு நீண்ட ஆய்வுக்கு பின்னே பட்டா மாறுதல் கிடைக்கும். தற்போதைய நிலையில் உடனடியாக பட்டா மாறுதல் கிடைப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏனெனில் சர்வே எண்ணை சரி பார்க்க வேண்டும், மூல ஆவணம் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவு இனங்கள் இருக்கும் பட்சத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என காரணங்கள் உள்ளது.
தானாக மாறும்
இப்படி பல காரணங்கள் இருப்பதால் பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்தில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு புதிய மாறுதலை கொண்டு வந்துள்ளது. வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்படும்.
வில்லங்கங்கள் உள்ளதா
இந்த திட்டத்தின் படி, சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும்.
அலைய தேவையில்லை
எனவே ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை. சர்பதிவாளர்கள் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும். இதன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. இதன் காரணமாக சார்பதிவாளர்களுக்கே கூடுதல் பணி சுமை ஏற்படும். அதேநேரம் பொதுமக்களுக்கு பயன் அடைவார்கள். இந்த திட்டத்தால் மக்களுக்கு பட்டா மாறுதலுக்கு அலைச்சல் குறையும்.