ரா தூக்கம் தூங்கி பல நாளாச்சுப்பா.. தண்ணீர் லாரி வரவிற்காக கண்ணீர் சிந்தும் சென்னை மக்கள்
Recommended Video
சென்னை: தண்ணீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ள தலைநகர் சென்னையில் தண்ணீர் லாரிகளுக்காக காத்திருந்து காத்திருந்து, தூக்கத்தை கூட தொலைத்து விட்டு நிற்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கிய செம்பரம்பாக்கம், வீராணம், புழல் உள்ளிட்ட ஏரிகள் பருவமழை பொய்த்து போனதால் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் தண்ணீருக்காக அல்லாடி நிற்கிறது தலைநகரம்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லட்சாதிபதிகளாக இருந்தாலும், சரி சாதாரண வீட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினராக இருந்தாலும் சரி, குடிசை பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களாக இருந்தாலும் சரி, அனைவரது வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தாகம் தீர்க்கும் தண்ணீர்.
சமீப நாட்களாக தலைநகர் சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து நாம் கேள்விப்படும் செய்திகள் அனைத்துமே அதிர்ச்சிகரமாகவும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் என்னவென்றால் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்கள் பலவும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டாம் எனவும், வீட்டிலிருந்தே வேலை செய்து தரும்படி அறிவுறுத்தியுள்ளன. மறுபக்கம் நகர் முழுவதும் வியாபித்துள்ள பெரிய பெரிய உணவகங்கள் கூட, தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மதிய உணவு சேவையை தவிர்த்து வருகின்றன.
மேலும் சில உணவகங்கள் தண்ணீருக்கு காசு செலவழிக்க முடியாமல், சில நாட்களுக்கு கடையை மூட முடிவு செய்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இனி வர உள்ள நாட்களில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வேறு என்ன மாதிரியான விசித்திர பிரச்சனைகள் அல்லது அறிவிப்புகள் நம் காதில் விழ காத்திருக்கிறதோ தெரியவில்லை.
போனில் பேசிய ஸ்டாலின்.. உடனே ரத்து செய்த தெற்கு ரயில்வே மேலாளர்.. தயாநிதி மாறன் பரபரப்பு தகவல்
இதனிடையே சென்னையில் வசிக்கும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினரின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. நடுத்தர வர்க்க மக்கள் தண்ணீர் கேனை குடிக்க காசு கொடுத்து வாங்கினாலும், அத்தியாவசிய தேவைக்கும் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்த முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர்.
தண்ணீர் பிரச்சனையாலேயே தங்களால் தொழிலிலும், வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை என குமுறுகின்றனர். லாரி தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் நிலையோ இன்னும் மோசம். வாரத்திற்கு எந்த நாட்களில் எப்போது வருவார்கள் என்றே தெரியாது. சில நேரங்களில் இரவு வருவார்கள், இல்லையென்றால் நள்ளிரவு கூட வருவார்கள். நள்ளிரவும் இல்லையென்றால் அதிகாலை கூட வந்து தண்ணீர் சப்ளை செய்வார்கள்.
இதனால் லாரி தண்ணீருக்காக ஏங்கி தவிக்கும் மக்கள் தாங்கள் இரவு தூங்கி பல நாட்கள் ஆகிறது. எப்போது தண்ணீர் லாரி வரும் என வழிமேல் விழி வைத்து காத்திருந்தே, தங்கள் உடல்நிலை பாழாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இரவு சரியாக தூங்காததால் பகலில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. அப்படியே சென்றாலும் பணியில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் தங்களது வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படுகிறது என புலம்புகின்றனர்.