காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையவே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.. விஜயதாரணி பேட்டி
சென்னை: நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்புகளை வைத்து கொண்டு எந்த முடிவிற்கும், நாம் செல்ல முடியாது என தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா விஜயதாரணி கருத்து தெரிவித்துள்ளார்.
தேசம் முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூரை தவிர்த்து, 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலையிலிருந்து வெளியிடப்பட்ட எக்ஸிட் போல்களின் முடிவுகள்,பெரும்பாலும் ஆளும் பாரதிய ஜனதாவிற்கே சாதகமாக வந்துள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவை தொகுதி தேர்தல்களில், திமுக கூட்டணியே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் கூறியுள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி, அரசியல் கட்சியின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா ஆட்சியமைக்கும் என்ற முடிவுகளை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை.
இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்புகளை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி கூறியுள்ளார் கடந்த 8 தேர்தல் கருத்துக் கணிப்புகளில் இதுவரை ஒருமுறை தான் கணிப்புகளின் படி முடிவுகள் வந்தன எனவே இந்த எக்ஸிட் போல் முடிவுகள் எந்த அளவிற்கு உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது என குறிப்பிட்டார்
அப்படியா?.. எனக்கு தெரியாதே?.. உங்களுக்கு யார் சொன்னது?.. செய்தியாளர்களை கேள்வி கேட்ட ஸ்டாலின்!
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் மேலும் வரும் நாட்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் . காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் விரும்புகின்றன.
நாட்டு மக்களும் அதையே தான் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்துள்ள அமோக ஆதரவு வரும் 23-ம் தேதி அனைவருக்கும் தெரிய வரும் என்றார்