வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது
சென்னை: சென்னையில் பரவலாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னையின் வடபழனி, சாலி கிராமம், விருகம்பாக்கம் உள்ள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வார விடுமுறையில் திடீரென்று மழை கொட்டியதால், மழையில் நனைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் கனமழை பெய்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், வால்பாறை, சோலையாறில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.