போலீஸ் உங்கள் நண்பன்.. அப்படியா நடந்துக்குறீங்க.? காவல்துறை மீது பாய்ந்த மனித உரிமை ஆணையம்
சென்னை: காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாக்கு பேப்பர் அளவில் மட்டுமே உள்ளது. ஆனால் நிஜத்தில் நிலைமை அப்படி இல்லை என மாநில மனித உரிமை ஆணையம் சாடியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் சென்னை ராமாபுரம் அருகே மனோகரன் என்பவரது சகோதரர், எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கொண்டுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற மனோகரன் சென்றுள்ளார்.
அந்த இக்கட்டான சமயத்தில் சம்பவ இடத்தில் இருந்த வளசரவாக்கம் ஆய்வாளராக இருந்த சந்துரு, மனோகரனிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். விபத்தில் சிக்கிய சகோதரரை காப்பாற்ற சென்றவரை சரமாரியாக தாக்கியுள்ளார் காவலர் சந்துரு.
தாக்கியதோடு மட்டுமல்லாமல் மிகவும் தகாத வார்த்தைகளால் கொச்சை கொச்சையாக திட்டியுள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான மனோகரன், மனித உரிமை ஆணையத்தில் காவலர் சந்துரு மீது புகார் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த மாநில மனித உரிமை ஆணையம், காவலர் சந்துரு மீது தவறு இருப்பதை உறுதி செய்தது. மேலும் பாதிக்கப்பட்ட மனேகரனுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை உங்கள் நண்பன் என்பது காகித அளவில் மட்டுமே உள்ளது. ஆனால் நிஜ வாழ்வில் பொதுமக்களுக்கு நண்பனாக காவல்துறை திகழ்வதில்லை. மாறாக அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு அச்சுறுத்தி வைக்கும் நடவடிக்கைகளில் தான் காவல்துறை ஈடுபட்டு வருகிறது என சாடியுள்ளது.
மனோகரனுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ள இழப்பீடு தொகையை, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் சந்துருவிடம் பிடித்தம் செய்யவும் ஆணையம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
காவலர்களில் சிலர் நண்பர்களை போல இருந்தாலும் பெரும்பாலானோர் அதுவும் நடுத்தர மற்றும் ஏழைகளை, குறைந்தபட்சம் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. இப்படிப்பட்ட காவலர்களுக்கு அபராதம் விதிப்பது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை மட்டும் போதாது.
காவலர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் கவுன்சிலிங் கொடுத்து சாதாரண பொதுமக்களை சகமனிதனாக பார்க்கும் மனோபாவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.