அதிமுகவுக்கு மவுசு கூடியிருக்காமே.. உளவுத்துறை ரிப்போர்ட்.. இதுதான் திடீர் கெத்துக்கு காரணமா?
மக்கள் மத்தியில் அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: சும்மா சொல்லக்கூடாது.. ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாலை தலைமையிலான அணியை பார்த்ததும், என்னவோ நினைத்தார்கள். ஆனால் இப்போதைய ரிசல்ட் என்ன தெரியுமா? ஆளும் கட்சிக்கு மவுசு கூடியிருப்பது தானாம்!
2 வருஷமாக தமிழகம் அமைதியாக இல்லை. எங்கே திரும்பினாலும் போராட்டம், அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு, குட்கா ஊழல், கோர்ட், கேஸ், அமைச்சர்களின் நகைச்சுவை மற்றும் சர்ச்சை பேச்சு என கேலி கூத்தான ஒரு அரசாகவும், அதிருப்தி கொண்ட அரசாகவும்தான் பெரும்பாலும் பார்க்கப்பட்டது.
ஆனால் தை பிறந்ததும் மற்றவர்களுக்கு எப்படியோ, ஆளும் தரப்புக்கு நல்ல வழியே பிறந்துவிட்டது. ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய் அரசு அறிவித்ததுதான் முதல் பந்து.
வரவேற்பு
பல கட்ட எதிர்ப்புகள், நீதிமன்ற தடை உத்தரவு என அனைத்தையும் தாண்டி மக்கள் மனதில் இந்த 1000 ரூபாய் தந்து இடம் பிடித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. உண்மையிலேயே இந்த 1000 ரூபாயை வரவேற்று ஆனந்தப்பட்டார்கள் ஏழை எளிய மக்கள்.
2000 ரூபாய்
இதையடுத்துதான் தமிழக பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த அறிக்கைகள் சில மக்களின் கவனத்தை ஈர்த்தது. பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 2000 என தமிழக மக்களுக்கு குறிப்பாக 60 லட்சம் குடும்பத்திற்கு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஅறிவித்தது முக்கியமான திருப்பமாகும்.
நடைமுறை
வெறும் அறிவிப்புடன் இதை நிறுத்தாமல், அவரவர் வங்கி கணக்கில் இம்மாத இறுதிக்குள்ளேயே செலுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்ததும் தமிழக ஏழை மக்கள் வயிற்றில் பாலை வார்த்தது. ஆனால் எடப்பாடி அரசின் இந்த செயல்பாடுகளை, புதிய திட்டங்களை,அறிவிப்புகளை எதிர்க்கட்சிகள், கண்டிப்பதோடு, இது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கை என விமர்சனமும் செய்தனர்.
2 மாநகராட்சிகள்
தேர்தலை முன்னிறுத்தி கொடுக்கப்படும் வாக்குக்கு பணம் என்றும் சொன்னாலும், வெகுஜன மக்கள் கிட்டத்தட்ட வானத்தில் பறப்பது மாதிரி ஆகிவிட்டார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், கூலி கிடைக்காமல் தடுமாறும், முக்கியமாக கஜா புயலால் இன்னும் இயல்பை எட்டாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே நினைத்தார்கள். இதை தவிர புதிய மாவட்டம் அறிவிப்பு, புதிய 2 மாநகராட்சிகள் அறிவிப்பு, பிளாஸ்டிக் தடை விதிப்பு என அறிவித்து நல்ல பெயரை ஆளும் தரப்பு மறக்காமல் தட்டி கொண்டு சென்றுவிட்டது.
ஏற்றமா? வீழ்ச்சியா?
எப்படி பார்த்தாலும், ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அதிமுக அரசுக்கு முன்பிருந்ததை விட மவுசு கூடியுள்ளது என்பதை உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு ஏற்றம் பெறும், அல்லது வீழ்ச்சி என்பதெல்லாம் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, பிரச்சாரங்கள் மூலமே தெரிய வரும். பார்ப்போம்!