டீ விலை திடீர் உயர்வு..! இனி பத்து ரூபாய்க்கு தேனீர் குடிக்க முடியாது..! காரணம் இது தான்!
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேநீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இனி பாக்கெட்டில் 10 ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு டீ கடை பக்கம் கூட செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
திருச்சி, கோவை, என பல இடங்களில் ஒரு கப் டீ ரூ.12 க்கு விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய உழைக்கும் வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாளெல்லாம் உழைப்பு
நாள் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அவர்களது களைப்பை போக்கி புத்துணர்ச்சி தரக்கூடிய பானமாக திகழ்கிறது தேநீர். உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தப்படியாக மிக அதிகமாக அருந்தக்கூடிய பானம் தான் இந்த தேநீர். சூடாக ஒரு கப் டீ குடித்து முடிப்பதற்குள் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை தேநீர் கடைகளில் விவாத மேடையே நடைபெற்று முடிந்துவிடும்.

பாகுபாடின்றி
இப்படி ஏழை எளியோர், செல்வந்தர், என பாகுபாடின்றி உலகம் முழுவதும் மக்களால் விரும்பி அருந்தக் கூடிய தேநீரின் விலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக கூறப்படுவது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வும் தான். சென்னையை பொறுத்தவரை வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.2,133-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.12 டீ விலை
ஏறத்தாழ திருச்சி, கோவை, மதுரை, என அனைத்து பெருநகரங்களிலும் இதே விலை தான். இதனால் 10 ரூபாய்க்கு இனியும் டீ விற்றால் கடை வாடகை, மின் கட்டணம், ஆட்களுக்கு ஊதியம், என எதுவுமே தங்களுக்கு மிஞ்சாது என்பதால் ஒரு கப் தேநீர் விலை ரூ.12 என விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 12 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கப் டீயின் விலை, விரையில் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

தேநீர் கடை
இதேபோல் இஞ்சி டீ, ஸ்பெஷல் டீ, லெமன் டீ, பிளாக் டீ, என கடைகளின் தரத்திற்கு ஏற்றார் விலை இந்த வகை தேநீர்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு கோவையில் கடந்த 10-ம் தேதி முதலும், திருச்சியில் நேற்றிலிருந்தும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் இனி டீ குடிக்க விரும்புபவர்கள் குறைந்தது பாக்கெட்டில் 15 ரூபாயாவது இருந்தால் டீ கடை பக்கம் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வுகள்
ஒரு காலத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தேநீர் மெல்ல உயர்ந்து 3 ரூபாய்க்கும் பிறகு 5 ரூபாய்க்கும் விற்கப்பட்டு 7 ரூபாயில் வந்து நின்றது. பிறகு அந்த விலை 10 ரூபாயாக மாறியது. இப்போது 12 ரூபாயாக உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு கப் டீயின் விலை ரூ.15-க்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.












Click it and Unblock the Notifications