தலைசுற்ற வைக்கும் தண்ணீர் விலை.. அரசு நடவடிக்கை எடுக்குமா.? பரிதவிக்கும் சென்னை வாசிகள்
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால், தனியார் டேங்கர் லாரி தண்ணீரின் விலை சரசரவென உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 சதவீதம் விலை உயர்ந்து, ஒரு லாரி தண்ணீர் சுமார் ரூ 5,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ஏரிகள் அனைத்தும் அடியோடு வறண்டு விட்டதால், தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரிய லாரிகளை எதிர்நோக்கி காலிக்குடங்களுடன் மக்கள் மணிக்கணக்கில் சாலைகளில் காத்து கிடக்கும் அவல நிலை தொடர்கிறது.
அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு, டேங்கர் லாரிகளின் எண்ணிக்கையை 800-லிருந்து ஆயிரமாக உயர்த்தவும், தினமும் பத்தாயிரம் முறை தண்ணீர் வழங்கவும் குடிநீர்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் அந்த அளவுக்கு குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைநகர்வாசிகள், மெட்ரோ வட்டரை புக் செய்யவே முடியவில்லை. அப்படியே புக் செய்தாலும் 10 நாட்களானாலும் வருவதில்லை என புலம்பி தவிக்கின்றனர்.
இதுஒருபுறம் என்றால் மற்றொரு பக்கம் தனியார் தண்ணீர் லாரிகளின் கொள்ளையும் மக்களை வாட்டி எடுக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக நீர் உறிஞ்சப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் தனியார் தண்ணீர் லாரிகளின் படையெடுப்பு இப்போது திருப்போரூர் பக்கம் திரும்பியுள்ளது.
கோடையை வாய்ப்பாக கருதி தண்ணீர் விலையை தங்கள் விருப்பப்படி அதிகரித்து விற்கின்றன தனியார் லாரிகள். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மக்கள், ஒவ்வொரு டேங்கர் லாரிகளில் இருந்தும் சுமார் 24,000 லிட்டர் தண்ணீர் வாங்குவதாகவும், ஆனால் நாளுக்கு நாள் விலையை உயர்த்தி கொண்டே போவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு காசு கொடுத்து வாங்கினாலும் தண்ணீரின் தரம் என்பது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மோசமாக தான் உள்ளது என குமுறுகின்றனர் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள். தண்ணீர் சரி இல்லாததால் வீட்டிலிருக்கும் குழாய்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிப்பேர் ஆகிவிடுவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் குடிப்பதற்கென்று வேறு தனியாக காசு செலவு செய்து வாங்குவதால், தண்ணீருக்கே தங்கள் ஊதியத்தின் பெரும்பகுதி போய்விடுனகிறது என்பது நடுத்தர வர்கத்தினரின் புலம்பல். தலா 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தனியார் டேங்கர் லாரி ஒன்றுக்கு ரூ.25,000 கொடுத்து கொண்டிருந்த மக்கள், தற்போது தேவை அதிகமாகி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரூ.3,500 விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர்.
24,000 லிட்டர் தண்ணீருக்கு 3,500 ரூபாய்க்கு பதில் 5,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாக மக்கள் கூறியுள்ளனர். தொலை தூரத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வருவதற்காகும் எரிபொருள் செலவே இதற்கு காரணம் என கூறுகின்றனர் தனியார் டேங்கர் தண்ணீர் லாரி நிறுவன உரிமையாளர்கள்.