புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை... இறைச்சி வாங்க அலைமோதும் அசைவப் பிரியர்கள்..!
சென்னை: புரட்டாசி மாதம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி வாங்குவதற்காக அசைவப் பிரியர்கள் கூட்டம் கறி கடைகளில் அலைமோதுகிறது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் அந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் விரதம் இருப்பார்கள். கூடுமானவரை அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள். இதனால் மற்ற நாட்களைக் காட்டிலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் மீன்களின் விலை வீழ்ச்சியடையும்.
இந்நிலையில் நேற்று முன் தினத்தோடு புரட்டாசி மாதம் முடிந்து விட்டதால் அசைவப் பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இறைச்சிகளை வாங்க நேற்று முதல் படையெடுத்துவிட்டனர். நேற்று சனிக்கிழமை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே கடந்த வாரம் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.800 வரை விற்கப்படுகிறது. அதேபோல் ஆட்டுக்கறி கிலோ ஒன்று ரூ.600-க்கு விற்பனையான நிலையில் அதன் விலையும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் விலையை பற்றி அசைவப் பிரியர்கள் பொருட்படுத்தவில்லை.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காசிமேடு மீன் மார்க்கெட்களில் அதிகாலை முதலே மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட இன்று கூடுதல் பரபரப்பு அங்கு காணப்பட்டது. இதனிடையே சென்னை மாநகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அங்கு வருபவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.