காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம்... பொதுமக்களுக்கு அரசு அறிவிப்பு
காணும் பொங்கல் பண்டிகை நாளில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ஆம் தேதியன்று பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு வரவேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு வரவேண்டாம். பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது போன்று காணும் பொங்கல் அன்று வருகிற 16ஆம் தேதியும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காணும் பொங்கல் அன்று 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு போலவே காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை சீல் வைக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.
பொங்கல் திருநாளான 14ஆம் தேதி, மாட்டுப்பொங்கல் தினமான 15ஆம் தேதி, காணும் பொங்கலுக்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை ஜனவர் 17ஆம் ஆகிய 3 நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் மெரினா கடற்கரையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தற்போது முககவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் மெரினா கடற்கரையில் கூடுதலாக மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அங்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.