நீக்கப்பட்ட திருநாவுக்கரசர்.. பதவி பெற்ற கே.எஸ். அழகிரி.. காங்கிரஸின் மாற்றத்திற்கு இதுதான் காரணம்?
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதற்கும், புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதற்கும், புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
பல நாட்களாக
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்பது பல நாட்களாக திட்டமிடப்பட்டு ஒன்று என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.
என்ன காரணம்
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மீது தலைமைக்கு நிறைய புகார்கள் சென்று இருக்கிறது. கட்சி ரீதியாக காங்கிரஸ் வலுவாக இருந்தாலும், கட்சிக்குள் பெரிய அளவில் ஒற்றுமை இல்லை என்று ராகுல் காந்திக்கு புகார் சென்று இருக்கிறது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று சில தரப்பு ராகுலிடம் வலியுறுத்தி இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தை
அதேபோல் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழகத்தில் பெரிய அளவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். இதனால்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாமல், இறுதி தொகுதி பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது என்றும் கூறுகிறார்கள். இதை முன்னிட்டே தற்போது தலைவர் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
கோஷ்டி பிரச்சனை
அதேபோல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிகளுக்கு சமீப காலமாக மீண்டும் கோஷ்டி பிரச்சனை அதிகம் ஆகிவிட்டதாகவும் புகார்கள் ராகுலிடம் குவிந்து இருக்கிறது. இதனால்தான் கே.எஸ் அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். கே.எஸ் அழகிரி ப. சிதம்பரத்தின் ஆதரவாளர் என்றாலும் கூட காங்கிரஸின் அனைத்து தரப்பையும் ஆதரித்து செல்வார் என்று கூறுகிறார்கள்.
தொடங்க வாய்ப்புள்ளது
இதனால் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த கூட்டணி ஏற்கனவே இறுதியாகிவிட்டாலும், இன்னும் தொகுதி உடன்படிக்கை நிகழவில்லை. இதனால் அது தொடர்பாக ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.