தனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இடஒதுக்கீடு தேவை.. ராமதாஸ் கோரிக்கை!
தனியார் துறை வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும், என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தனியார் துறை வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும், என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதா லோக் சபா, ராஜ்ய சபா இரண்டிலும் வெற்றிபெற்று, சட்டமாகி உள்ளது.
இன்னும் சில நாட்களில் தனியார் துறையிலும் இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனியார் உயர்கல்வி
தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை பாமக கடுமையாக எதிர்க்கிறது.
27% இட ஒதுக்கீடு
எனினும், தனியார் கல்வி நிறுவனங்களில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், இப்போது கொண்டு வரப்படவிருக்கும் இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அதை வரவேற்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்ததில் பாமகவின் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது.
செயல்பாட்டுக்கு வரவில்லை
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் இருந்தாலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அமைந்து இரு ஆண்டுகளான பிறகும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக 2006 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலும் 27% இட ஒதுக்கீட்டை தள்ளிப்போட முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு எதிராக கூட்டத்தில் பங்கேற்ற திமுகவின் பிரதிநிதிகள் வாயைத் திறக்கவில்லை.
தள்ளிப்போடும் முயற்சி
இட ஒதுக்கீட்டை தள்ளிப்போடும் முயற்சிக்கு எதிராக நான் கடுமையான கண்டனக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, அது குறித்து மாலையில் மீண்டும் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு என்னிடம் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாகக் கூறினேன்.
நீட்டிக்க வேண்டும்
அதுமட்டுமின்றி லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் ஆதரவையும் திரட்டி, அவர்களையும் இட ஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைத்தேன். அதன் பயனாகவே 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது அது சாத்தியமாவது மகிழ்ச்சியளிக்கிறது; மனநிறைவளிக்கிறது.
நிறைவேற்ற வேண்டும்
எனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவுடன், தனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும், என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.