கிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை
சென்னை: முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமியின் மரணம் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கே.பி.பி.சாமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் கடந்த ஒரு வருடமாகவே அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நோய் ஒரு புறம் வாட்டிய நிலையில் மகன் தற்கொலையும், மனைவி மரணமும் அவரை மற்றொருபுறம் வாட்டி வதைத்து வந்துள்ளது.
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி காலமானார்
பெயர் மாற்றம்
சென்னை திருவொற்றியூர் காசி விஸ்வநாதர் குப்பத்தில் பிறந்து வளர்ந்த கே.பி.பி.சாமி பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை பரசுராமன் சூட்டிய பக்கிரிசாமி என்ற பெயரை அரசியலுக்காக கே.பி.பி.சாமி என அந்தக்காலத்திலேயே மாற்றிக்கொண்டவர். அந்தக்கால சினிமாபடங்களில் பக்கிரி என்ற பெயரில் வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் ரவுடி கதாபாத்திரங்கள் இருக்கும். இதனால் பக்கிரி என்பதை வெட்டிவெட்டு வெறும் சாமியாக வலம்வரத் தொடங்கினார். பயம் என்றால் என்னவென்று தெரியாத அளவுக்கு வடசென்னையில் ஒரு காலத்தில் அரசியல் செய்தார்.
தடாலடி
வடசென்னையில் மீனவர்கள் அதிகம் இருப்பதால் எப்போதும் அங்கு அதிமுகவின் கையே ஓங்கி காணப்படும், படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆர் மீனவராக நடித்த காலம் முதல் அதிமுகவுக்கு மீனவர்கள் மத்தியில் எப்போதும் ஒரு கிரேஸ் இருக்கும். ஆனால் அந்த பிம்பத்தை உடைத்தெறிந்தார் சாமி. மீனவ சமுதாயத்தை சேர்ந்த கே.பி.பி.சாமி தனது ஏரியாவான கே.வி.குப்பத்தில் எப்போதும் திமுக கொடிகளை பறக்கவிட்டார். அதிமுக ஆட்சி நடந்தாலும் கூட திமுக கொடிகளை பறக்கவிட அவர் தவறியதில்லை. அந்தளவு தீவிர திமுக விசுவாசியாக திகழ்ந்தார் கே.பி.பி.சாமி.
மனைவி மரணம்
கே.பி.பி.சாமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் மூத்த மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக சாமியின் மனைவி உமா காலமானார். மகன், மனைவியின் பிரிவு சாமியை உலுக்கியது. இதனால் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு எம்.எல்.ஏ.வாக என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் கவனித்து வந்தார். பட்ட காலில் படும் என்பது போல், சாமிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.
மரணம்
சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சாமி, பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவு குறித்து வடசென்னை பகுதி திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ''சாமி கொஞ்சம் தடாலடியான ஆள் தான், ஆனால் தன்னிடம் கட்சிக்காரன் உதவின்னு வந்து நின்றால் சும்மா அனுப்பமாட்டார். தனக்கு ஆயிரம் கவலைகள், சிக்கல்கள் இருந்தாலும் கையில் பணத்தை கொடுத்து சிரித்த முகமாக அனுப்பி வைப்பார். மரணமடைய கூடிய வயதில்லை அவருக்கு, பாவம் பார்த்துக்கொள்ள ஆளில்லை'' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.