சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்... வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்
சென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வீராணம் ஏரி நீரை 70 சதவீதம் பயன்படுத்த குடிநீர் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளில் வெறும் 465 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து, அதை குழாய்கள் மூலம் சென்னைக்கு எடுத்து வர முடிவு செய்யப்பட்டது.
கோயம்பேடு பக்கம் போய்ராதீங்க.. கிலோ பீன்ஸ் ரூ. 160க்கு விக்குதாம்.. எல்லா காய் விலையும் விர்விர்!
அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், இந்தாண்டில் மட்டும் வீராணம் ஏரி 3-வது முறையாக அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. இதைதொடர்ந்து, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தேவையான குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோடைக்காலம் முழுவதும் சமாளிக்கும் வகையில், வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் எடுக்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏரியின் மொத்த கொள்ளளவில் இருந்து 70 சதவீத தண்ணீரை சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளித்து விடலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது மேலும் வலுவடைந்து 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோடை மழை கைக்கொடுக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.