கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக மாறியுள்ளது.. ராமதாஸ் கவலை
சென்னை: கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதி கிடைப்பதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலை தற்போது மிக பரிதாபமானதாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் சரிவர வழங்கப்படாத நிலையில், அன்றாட செலவுகளுக்கு கூட நிதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மொத்தம் 737 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 537 சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனால் 356 சங்கங்களில் பணியாற்றி வரும் 1,014 ஊழியர்களுக்கு, அதிகபட்சம் கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.55 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாடி வருகின்றன. குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கூட, அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு பெரிய அளவில் சொந்த முதலீடு இல்லாததாலும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராமல் முடங்கி விட்டதாலும், சங்கங்களின் வருவாய் முற்றிலுமாக குறைந்து விட்டது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் வீட்டுக் கடனை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையினர் உயர் வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நிலுவை வைத்துள்ள தொகை ரூ.951.82 கோடி. குறைந்தபட்சம் இந்தத் தொகையை வசூலித்தால் கூட, அனைத்து சங்கங்களின் கடன்களையும் அடைத்து விட்டு, சங்கங்களை மீண்டும் லாபத்தில் இயக்கலாம்.
ஆனால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெறப்பட்ட கடன்களை ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப் போவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் எதிர்கட்சியினர். பொய்யான வாக்குறுதியை நம்பி பலரும் கடன் தவணையை திரும்பச் செலுத்த தயங்குகின்றனர். இது தான் இந்த சங்கங்களுக்கு புத்துயிரூட்ட தடையாக உள்ளது.
கடனை திரும்ப செலுத்துவதுடன், கூட்டுறவு சங்கங்களுக்கு குறைந்த அளவில் மறு முதலீடும் வழங்கப்பட்டால் மீண்டும் லாபத்தில் இயங்கத் தொடங்கி விடும். தமிழக அரசின் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஊராட்சி முகமைகளிடருந்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு மாற்றப்படும் பட்சத்தில் அச்சங்கங்கள் வலிமையடைவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
எனவே கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் குழு அமைத்து, அதன் மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை வகுத்து, உடனடியாக செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.