சாதித்த அமைச்சர் தங்கம்.. ஏழைகளின் வயிற்றில் பாலை வார்த்த சிமெண்ட் உற்பத்தியாளர்கள்.. செம அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுள்ளது. காய்கறி விலையும் பொதுமக்கள் தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் சென்று விட்டது.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு
இந்த நிலையில் பொதுமக்களுக்கு மேலும் பலத்த அடியாக சிமெண்டு, ஜல்லி கற்கள், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கடுமையாக உயர்ந்தன. ஏற்கனவே ஒரு வீடு கட்டுவதற்கு மிகவும் சிரமப்படும் நடுத்தர வர்க்கத்தினர் தற்போது கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தத்தளித்து வருகின்றனர். கட்டுமான உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.
தங்கம் தென்னரசு கோரிக்கை
கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். கட்டுமான பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
உற்பத்தி நிலையங்கள் வருவாய் இழப்பு
இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கொரோனா காரணமாக சிமெண்ட் உற்பத்தி நிலையங்கள் பெரும் வருவாய் இழப்பில் உள்ளது. 40 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருவதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய விலையில் சிமெண்ட் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சலுகை விலையில் சிமெண்ட்
நியாயமான விலையில், ஏழை, எளிய மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.