தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.. மத்திய அரசு புகார்
சென்னை: தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 1248 விமானங்கள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 17,707 தமிழர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து 587 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், தமிழக அரசு, விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
மேலும், வெளி நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஹைதராபாத், பெங்களூருவில் இறங்கி தமிழகம் வருகின்றனர். விமானங்களை தரையிறக்க ஏன் அனுமது மறுக்கிறது என தமிழக அரசு தான் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் லாக்டவுனை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை: மருத்துவ வல்லுநர் குழு
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார். விமானங்கள் தரையிறங்க அனுமதியளித்தது குறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை க்கு தள்ளிவைத்தனர்.