கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல்
மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை. முதல்வர் பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுக்குச் செல்லும் மின்சார வயர் கட்டிடப் பணியால் துண்டானதாகத் தெரிகிறது. இதனால், மின்சாரம் இன்றி, செயற்கை சுவாசம் அளிக்கப்படாமல் இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன், மின்சாரம் இல்லாத நேரத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழக்க மின்சாரம் இல்லாதது காரணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட காரணமாக இருந்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு
இருவர் மரணம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை!. முதல்வர் பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது!. கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இவர்களது மரணத்துக்குக் காரணம் ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவர்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது. இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
உலக விருதை எல்லாம் பெற்றுவிட்டதாக உளறிவரும் எடப்பாடி ஆட்சியின் இலட்சணம் இது!. கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன! மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.