சுட்டெரிக்கிறது சூரிய வெப்பம்… மழை பெய்யுமா என மக்கள் ஏக்கம்
சென்னை : கோடை காலம் இன்னும் தொடங்காத நிலையில், கத்திரி வெயில் போல் சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடைக்கால தொடக்க அறிகுறியாக வெயில் அதிகரித்து வருகிறது. முன்னதாக, வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த அளவு வெப்ப நிலையாக 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது.
நேற்று முன் தினம், வெப்ப சலனம் காரணமாக தலைநகர் சென்னையில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை கொட்டியது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சாலையில் செல்வோர் முகங்களை துணியால் மூடியபடி செல்கின்றனர். மதிய வேளைகளில் வெயில் கொளுத்துவதோடு அனல் காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் உடல் சூட்டைத் தணிக்க, சாலையோரம் வைக்கப்பட்டுள்ள இயற்கை உணவுகளை நாடி செல்கின்றனர்.
தென் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.. வடதமிழ்நாட்டில் வெயில் மண்டையை பிளக்கும்
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வரும் நாட்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என கூறப்படுகிறது.
பகலில் வெப்பக் காற்று வீசுவதால், இரவு நேரங்களில் அதிக புழுக்கம் ஏற்படுகிறது. சென்னையில் மாலை நேரங்களில் வழக்கத்தைவிட கடற்கரைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.