காவல்துறை என்கவுண்டரை தமிழக அரசு தடுக்க வேண்டும்... எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள்..!
சென்னை: சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை மீறி உயிரை பறிக்கும் நடவடிக்கைகள் கூடாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறை என்கவுண்டரை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார்.
ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?
ரவுடிகளின் ராஜ்யத்தை இரும்புக்கரம் கொண்டு தமிழக போலீஸார் ஒடுக்கி வரும் வேளையில், இவர் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
புலியின் உயிர்
நீலகிரி மாவட்டத்தில் 4 பேரைக் கொன்ற ஆட்கொல்லிப் புலியை, சுட்டுக்கொல்ல வேண்டுமா அல்லது உயிருடன் பிடிக்க வேண்டுமா என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த சூழலில்தான் காவல் பிடியிலிருந்து தப்பித்த இரண்டு குற்றவாளிகளை காவல்துறை என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொன்று மனித உரிமை மீறலை நடத்தியிருக்கிறது. புலியின் உயிருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மனித உயிர்களுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காகவும், வன்முறையில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்குவதற்காகவுமே இவ்வகை என்கவுண்டர்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று அரசும் காவல்துறையும் இந்நிகழ்வுகளை நியாயப்படுத்தினாலும் சட்டத்தின் அடிப்படையில் இவை மனித உரிமை மீறல்களாகும். காவல்துறையின் இதுபோன்ற என்கவுண்டர் பலிகளால் பல உண்மைகள் வெளியில் தெரியாமல் போகிற ஆபத்து ஏற்படுகிறது.
உண்மை வெளிவரும்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயிரோடு பிடிக்கப்பட்டு, குற்றத்திற்கான காரணங்கள், அதன் பின்னணி உள்ளிட்ட பல உண்மைகளை வெளிப்படும் போதுதான் போது தான் குற்றத்தைத் தடுப்பதற்கு அல்லது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடமுடியும். அதனைத் தவிர்த்து, தங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் என்கவுண்டர் கொலைகள் நடந்ததாக காவல்துறை கூறுவது மனித உரிமைகளுக்கு விடப்படும் மிகப்பெரிய சவாலாகும்.
கவனம் தேவை
வாழ்வதற்கான உரிமை மற்றும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை மீறுவதாக இது போன்ற என்கவுண்டர் நடவடிக்கைகள் அமையும் என்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இரண்டு என்கவுண்டர் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த போக்கு ஒரு நல்ல துவக்கமாக அமையாது. காவல்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊக்குவிக்காதீர்
ஆகவே தமிழக அரசு, காவல்துறையின் இத்தகைய என்கவுண்டர் கொலைகளை ஊக்குவிக்காமல், சட்டம் மற்றும் மனித உரிமை அடிப்படையில் குற்றவாளிகளை அணுக வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, நடைபெற்றுள்ள இரண்டு என்கவுண்டர் படுகொலைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு எஸ்.டி.பி.ஐ. கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.