விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு நியமனம் - தமிழ்நாடு அரசு
சென்னை:விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அளவிலான சிறப்பு கண்காணிப்பு குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு குழுவினர் விலங்குகளுக்கு நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், குறைக்கவும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- கொரோனா நோய் தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு மேற்கண்ட நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், குறைக்கவும் மற்றும் மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு இ.ஆ.ப. தலைமையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்), முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சிறப்பு செயலாளர் (வனம்), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், மேம்படுத்தப்பட்ட வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் ஆர்.சுந்தரராஜூ இ.வ.ப. (ஓய்வு) ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
மேலும் முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் மற்றும் தியடோர் பாஸ்கரன், வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோர்களை உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு (State Level Task Force) ஒன்றினை அமைத்துள்ளது. இப்பணிக்குழு நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தொடர்புடைய துறைகளின் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து தொடர் அறிக்கையினைச் சமர்ப்பிக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.