தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது... புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கின்றனர்..!
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர், அமைச்சர்கள் என தொடங்கி அகர வரிசையின் படி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி.
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியிருப்பதால் இது மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலைக்குள் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்வு நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் திமுகவுக்கு தனித்து 125 இடங்கள் உள்ளதால் அக்கட்சி முன்னிறுத்தும் நபர்களே அந்த இரண்டு பதவிகளுக்கு தேர்வு ஆவார்கள். அதன்படி சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் நாளை தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இதனிடையே இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவருக்கான இடத்தில் அமர்ந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர்களுக்கு இணையான அரசின் சலுகைகள் கிடைக்கும் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக போதிய இடைவெளியுடன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகள் கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.