தனலட்சுமியின் அலறல் சத்தம்... கத்தியால் கிழித்த நபரை துவைத்து எடுத்த பொதுமக்கள்
சென்னை: சினிமா பாணியில், சென்னையில் பெண்ணிடம் தங்க தாலியை பறித்த கொள்ளையனை, பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடித்து கொடுத்தனர்.
பூந்தமல்லியைச் சேர்ந்தவர் தனலட்சுமி, இவர் காட்டுப்பாக்கம் இந்திரா நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், திடீரென தனலட்சுமியின் கையை, கத்தியால் கிழித்து விட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, கூச்சலிட்டதை அடுத்து, அங்கு திரண்டு பொதுமக்கள், கொள்ளையனை விரட்டிச் சென்று, மடக்கிப் பிடித்தனர். அவர்களை தள்ளிவிட்டு தப்ப முயன்ற போது, தர்ம அடித்து கொடுத்து கைகளை கட்டி வைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து, அந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் சென்னை அயப்பன்தாங்கலைச் சேர்ந்த சிவகுமார் என்பது தெரிய வந்தது.
மேலும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த மிளகாய் பொடி, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசிடம் அந்த நபர், சிக்கிக் கொள்ளும் போது தப்புவதற்காக போலி பத்திரிகை அடையாள அட்டையையும், பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.