அம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம்
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு மும்முரமாக கையில் எடுக்க வேண்டும்
Recommended Video
சென்னை: என்ன இருந்தாலும் ஜெயலலிதா, ஜெயலலிதாதான். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சென்னையில் மக்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த அளவுக்கு ஜெயலலிதாவை நினைக்க வைத்து விட்டது சென்னையை வறண்டு போக வைத்து வரும் வறட்சியும், கொடும் வெயிலும், தண்ணீர்ப் பஞ்சமும்.
வரலாறு காணாத வெயில் கொடுமையால் சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் இல்லை, வெளியில் தலை காட்ட முடியவில்லை, மழை இல்லை, போர் வற்றிப் போய் விட்டது, கிணறுகளில் தண்ணீரைக் காணோம். குடங்களுடன் தெருத் தெருவாக மக்கள் அலையும் நிலை.
மழைநீர் சேகரிப்பு
ஜெயலலிதா இந்த இடத்தில்தான் நினைவுக்கு வருகிறார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மழை நீர் சேகரிப்புக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா பார்த்துப் பார்த்து செய்த திட்டம் இது. 2001ம் ஆண்டு இதை அவர் தொடங்கினார். மாநிலம் முழுவதும் நீர் மட்டம் உயர இந்தத் திட்டம் வெகுவாக உயர்ந்தது. பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
அதிரடி அறிவிப்பு
அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு என்பதை கட்டாயமாக்கினார் ஜெயலலிதா. மழை நீர் சேகரிப்பு இருந்தால்தான் கட்டட வரைபடங்களுக்கு அனுமதியும் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். இதனால் மக்கள் வீடுகளில் மழை நீர் சேகரிப்பை உருவாக்கினர். அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள், வீடுகள் உள்பட எல்லா இடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம்
ஆரம்பத்தில் மக்களுக்கு இது பெரும் எரிச்சலாகவே இருந்தது. ஆனால் ஜெயலலிதா விடவில்லை. கிடுக்கிப்பிடி போட்டு இதை அமல்படுத்துவதை உறுதி செய்தார். விளைவு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. மழை நேரத்தில் பெய்த மழை நீர் முறையாக சேமிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுாக உயர்ந்தது.
தண்ணீர் பிரச்சனை
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்த காரணத்தால் தண்ணீர்ப் பிரச்சினையை வெகுவாக குறைக்க முடிந்தது. மக்கள் ஜெயலலிதாவின் இந்தத் திட்டத்தை வெகுவாக புகழவும் செய்தனர். ஜெயலலிதா இருந்தவரை இந்த திட்டம் முறைப்படி அமலில் இருந்து வந்தது. மக்களும் இதன் அவசியம், முக்கியத்தை உணர்ந்து நடந்து வந்தனர்.
அவலம்
ஆனால் இன்று நிலைமை தலைகீழாாகி விட்டது. மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் என்னவாயின என்று தெரியவில்லை. அந்தத் திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்துகிறதா என்பதும் தெரியவில்லை. இன்று சென்னையில் தண்ணீர் இல்லை, குடங்களுடன் தாய்மார்கள் குழாய்கள் முன்பு தவம் இருக்கும் நிலை. தண்ணீர் இல்லாத காடாக மாறி வருகிறது சென்னை நகரம்.
போர்வெல் கிணறு
சென்னை புறநகர்கள் பெரும்பாலும் வறட்சியை சந்தித்ததில்லை. இங்கிருந்து நகருக்குள் தண்ணீர் சப்ளை ஆவதுதான் இதுவரை நடந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு புறநகர்களிலும் வறட்சி தலைவிரித்தாடுகிறது. கிணறுகள் வற்றி விட்டன. போர்வெல் கிணறுகளில் நீர்மட்டம் அடியோடு இறங்கிப் போய் விட்டது. 400 அடி, 500 அடி என்று போர்வெல் கிணறுகளில் நீர் மட்டம் இறங்கிப் போய் விட்டது.
முக்கியத்துவம்
தமிழக அரசு உடனடியாக மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரமாக கையில் எடுக்க வேண்டும். அதேபோல மக்களும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். சீர் செய்ய வேண்டும். மழைக்காலத்தில் மழை நீரை சேகரித்து வைத்தால் அதன் பலன் கோடைகாலத்தில் உணர முடியும். கண்டதுக்கெல்லாம் முக்கியத்துவம் தரும் மக்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம்.
காப்பாற்ற வேண்டும்
அதை விட முக்கியமாக ஏரிகள், குளங்களை காக்க வேண்டியது போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கையாகும். ஆக்கிரமித்து ஆக்கிரமித்து வீடு கட்டி அழித்தது போதும். இனிமேலாவது உயிர் காக்கும் ஏரிகளை காப்பாற்றி, பாதுகாக்க முயற்சிப்போம். வேறு வழியே இல்லை.. இதைச் செய்யாவிட்டால் நா வறண்டு அழிந்து போவது உறுதி.