நிவர் புயலை அரசு கையாண்ட விதம் சிறப்புதான்... ஆனால் பாராட்ட முடியாது - கமல்ஹாசன்
கஜா புயலுக்கு முழுமையான நிவாரணம் அளிக்காத மத்திய அரசு, தேர்தல் அவசரத்தில் தற்போது நிவாரணம் வழங்க முன் வந்துள்ளது. அதிலாவது மக்களுக்கு நல்லது நடக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்
சென்னை: நாங்கள் அரசு கிடையாது. அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை. எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை பணிகளை இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் கரையை கடந்த போது கடும் மழை, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. சென்னை நகர் பகுதிகளும், புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வீடுகளுக்குள் பலர் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன் சைதாப்பேட்டையில் உள்ள முகாமில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
பல ஆண்டுகளாக மக்கள் படும் கஷ்டம்
செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இங்குள்ள மக்களின் கஷ்டங்களை, பார்த்தாலே கண்கூடாகத் தெரிகிறது. இங்குள்ளவர்கள் கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகளாக இங்கேயே வசிப்பவர்கள். பேரன் பேத்தியெல்லாம் எடுத்தவர்கள். இவர்களுக்குத் தொடர்ச்சியாக, நன்மை செய்கிறோம், வேறு இடம் கொடுக்கிறோம், வீடு பார்க்கிறோம் என்று பல அரசுகள் சொன்னதை நம்பி ஏமாந்து ஏமாந்து இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
நற்பணி செய்கிறோம்
இது எங்களுக்குப் புதுசு கிடையாது. நாங்கள் 40 ஆண்டுகளாக நற்பணி செய்து வருகிறோம். நாங்கள் அரசு கிடையாது. எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். மழைக்காலத்தில் அவ்வப்போது சாம்பார் சாதம் கொடுப்பதும், பழைய துணி கொடுப்பதும் தீர்வாகாது என்று சொல்கிறோம்.
உரிய நடவடிக்கை தேவை
எங்களால் முடிந்ததை, இவர்கள் கோரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டுசென்று கேட்போம். இவர்களுக்கு பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, எங்களின் கடமையும்கூட. அதனால் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க நாங்கள் முயற்சி செய்வோம்.
வீடு கொடுங்கள்
இங்குள்ள உயிருக்கு பயந்து வசிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. எங்களுக்கு வேறு இடம் கொடுங்கள், போய் விடுகிறோம் என்று கோரிக்கை வைக்கிறார்கள். நிவாரணம் எனது அந்தந்த வருஷத்துக்குக் கொடுப்பது. இங்கு கொடுத்த வாக்குறுதியை தேர்தல் நேரத்திலாவது நிறைவேற்ற வேண்டும். வீடு கொடுக்காமல் வீடு ஒதுக்கியதாக கணக்குக் காட்டியுள்ளார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர்கள் பெயரில் வீடு வராதபோது அந்த சகாயம் எல்லாம் எங்கு காட்டப்படுகிறது என்பதுதான் கேள்வி. சகாயத்தை இவர்கள் மீது காட்டியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடம்
இந்த முறை புயலை அரசு கையாண்டது பல உயிர் சேதங்களுக்குப் பின்னர் கற்றுக்கொண்ட பாடம். அதை முன்பே ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்வி. இந்த ஆண்டு சென்னை கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், சிறப்பாக இருந்ததா? என்றால் இங்குள்ள மக்களிடம் கேளுங்கள். ஏனென்றால் அரை மணி நேரம் முன்பு வந்து வீட்டைக் காலி பண்ணுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு அனைத்து நிலவரங்களும் தெரியும். அவர்களுடன் எத்தனையோ படித்தவர்கள் உடன் இருக்கிறார்கள் என்று கூறினார்.
தேர்தல் அவசரம்
கடலூர், விழுப்புரத்தில் அதிக அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கஜா புயல் நிவாரணமே முழுமையாகச் சென்று சேரவில்லை. நாங்கள் கேட்போம். இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுப்போம். கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாகக் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது நிவாரணத் தொகையைத் தருவதாகச் சொல்கிறார்கள், இது கண்டிப்பாக தேர்தல் அவசரம்தான். அதிலாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று கூறினார் கமல்ஹாசன்.
பாராட்ட முடியாது
புயல் முன்னெச்சரிக்கை பணிகளை இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பது ஊரறிந்த உண்மை. சென்னையைப் பொறுத்தவரை முன்பிருந்ததை விடச் சிறப்பாக இருந்தது. ஆனால், பாராட்டுக்குரியதாக இருந்ததா என்றால் இல்லை. ஏனென்றால் இவர்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது பாராட்ட ஒன்றுமில்லை என்று கூறினார் கமல்.