சில்லுனு ஒரு சாரல்.... சென்னை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: சென்னையில் குளிர்ந்த காற்று வீசுவதோடு ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியப்பெருங்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் லேசான மழை பெய்கிறது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இன்றுகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், குளிர்ந்த காற்று வீசியது. தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஊட்டியை போல் குளிர்ந்த சீதோசண நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.