இளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
சென்னை: இன்று திமுக இளைஞரணியின் 40-ம் ஆண்டு விழா அனுசரிக்கப்படுவதையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அணியை வளர்த்த தலைவருக்கு நன்றி, என்னோடு தோள் சேர்ந்து உழைக்கும் இளைஞர் அணி நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
மேலும் இயக்கத்தின் இதயமாக சொல்லப்படும் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்
மலைப்பும் பெருமையும்
கடந்த1980-ம் ஆண்டு ஜூலை திங்கள் 20-ம் நாள், மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். நாற்பதாவது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதனுடைய செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் மலைப்பாகவும் உள்ளது.கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இருந்து செயல்பட்ட பொறுப்பு இது. இதைவிட பெருமை எனக்கு என்ன வேண்டும்? ஏன் மலைப்பாக இருக்கிறது என்றேனென்றால், கடந்த 40 ஆண்டு காலமாக இளைஞரணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை செதுக்கி, அசைக்க முடியாத கற்கோட்டையாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதனை மேலும் கட்டிக்காக்கும் பொறுப்பு, என் கையில் வந்து சேர்ந்துள்ளது.
இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தி.மு.க
தி.மு.க என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான். 1949ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களின் வயது 40. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வயது 25. கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு அப்போது வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால் தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன்.
அசைக்க முடியாத ஆலமரம்
இந்த இளைஞர் சக்தி தான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாக காட்சியளிக்க வைத்துள்ளது. இயக்கத்தின் வேர் ஆழமானது. கிளைகள் விரிந்து பரந்தது. யாராலும் எளிதில் அசைக்க முடியாதது. அதனால் தான், இன்று பலருக்கும் நம் கழகத்தைப் பார்த்தால், வயிற்றெரிச்சல்.
விமர்சனங்களுக்கு ஒரே பதில் செயலே
பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில் ‘'செயல்'' மட்டுமே என்று தளபதி ஸ்டாலின் அடிக்கடி சொல்வார்கள். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்.
ஸ்டாலின் ஆட்சியை மலர வைப்போம்
நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்று தான். தமிழ்நாட்டில் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவு பகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்